விஜயகாந்த்திடம் வசதி உள்ளது, எங்களிடம் என்ன இருக்கு?...தேமுதிக தமிழழகன்
சென்னை: விஜயகாந்த்திடம் வசதி உள்ளது. சொந்த செலவில் தனது தொகுதிக்கு மட்டும் செய்து கொள்கிறார். ஆனால் எங்களிடம் அப்படி இல்லையே. இதனால்தான் முதல்வரைப் போய்ப் பார்த்தாம். இல்லாவிட்டார் எங்களுக்கு வாக்களித்த மக்கள் எங்களைத் திட்ட மாட்டார்களா என்று கேட்டுள்ளார் திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
என் தொகுதி பிரச்னை தொடர்பாக, சட்டசபையில் இரு முறை பேசியும், நடவடிக்கை இல்லாததால், 16 கோரிக்கைகளை எழுதி, முதல்வரிடம் மனுவாக கொடுத்துள்ளேன்.
தனிப்பட்ட முறையில், வேறு எந்த கோரிக்கையும் நான் வைக்கவில்லை. கோரிக்கைகளை பெற்ற முதல்வர், எதெல்லாம் உடனடியாக செய்ய முடியுமோ, அதை செய்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள் தம்பி என்று தெரிவித்தார்.
விஜயகாந்திடம் அனுமதி கேட்டால், கிடைக்காது என்பதால், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்கவில்லை. எம்.எல்.ஏ., என்ற முறையில், முதல்வரை சந்திப்பதில், எனக்குள்ள உரிமையில், அவர் தலையிட முடியாது.
விஜயகாந்திடம் வசதி இருப்பதால், அவர் சொந்த செலவில் தொகுதி மக்களுக்கு உதவி செய்கிறார். என்னிடம் வசதி இல்லாததால், ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு, எதுவும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் தான், முதல்வரை சந்தித்தேன்.
என்மீது, முன் பகை காரணமாக, போலீசார் பொய்வழக்கு போட்டபோது, ஒருமாதம் தலைமறைவாக இருந்து, முன்ஜாமீன் பெற்றேன். இதனால், ஜூன், 15ம்தேதி நடக்கவிருந்த என் சகோதரர் திருமணம் தடைப்பட்டது. இந்த வழக்கு பொய் வழக்கு என்று தெரிந்திருந்திருந்தும், கட்சி தலைமை எனக்கு ஆதரவாக செயல்படவில்லை.
ஐந்து கோடி ரூபாய் பணத்திற்காகத் தான், முதல்வரை சந்தித்ததாக கூறுவதில், துளியும் உண்மையில்லை. நான் முதல்வரை சந்தித்த பிறகு, அனகை முருகேசன் எம்.எல்.ஏ.வை தவிர, கட்சி தலைமையில் இருந்து வேறு யாரும், என்னை தொடர்பு கொள்ளவில்லை.
தேமுதிக, கரைவேட்டி அணிந்து சென்றுதான், முதல்வரை சந்தித்தேன். தேமுதிக தலைமை அழைத்தால், கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்பேன் என்றார் அவர்.