தமிழக துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு- நாளை பதவி ஏற்பு
தமிழக பேரவையில் துணை சபாநாயகராக இருந்த பி. தனபால் கடந்த 10-ந் தேதி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட கடைசி நாளான நேற்று வரை பொள்ளாச்சி ஜெயராமனை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்ய வில்லை. இதனால் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியின்றி ஒரு மனதாக துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் சபாநாயகர் தனபால் வெளியிடுவார். இதைத் தொடர்ந்து துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவி ஏற்றார்.
நாளை கூடுகிறது சட்டசபை
இந்த நிலையில் நாளை தமிழக சட்டசபை காலை 10 மணிக்குக் கூடுகிறது. அப்போது துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அதன் பினனர் முதல் துணை நிலை மதிப்பீடுகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்படும். சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதுபற்றி நாளை நடைபெறும் அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.