ராஜ்குமார் கடத்தல் வழக்கு... வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 11 பேர் விடுதலை
கோபி: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கடத்தப்பட்ட ராஜ்குமாரை மீட்க கொடுக்கப்பட்ட பணத்தை கைமாற்றி விட்டு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக பண்ணை வீட்டில் குடும்பத்தோடு தங்கியிருந்தார் ராஜ்குமார். அப்போது அங்கு வந்த வீரப்பன் தலைமையிலான கும்பல் துப்பாக்கி முனையில் ராஜ்குமார் உள்ளிட்டோரைக் கடத்திச் சென்றது. இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய சம்பவம் இது.
ராஜ்குமாரை மீட்க பலமுனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட 108 நாள் போராட்டத்திற்குப் பின்னர் ராஜ்குமார் பத்திரமாக வீரப்பனால் விடுவிக்கப்பட்டார். அவரை விடுவிக்க பெரும் தொகை பிணையமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. வழக்கில் முத்துலட்சுமி உள்பட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 2 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர். வழக்கை கோபி கோர்ட் விசாரித்து வந்தது.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது 24 பேரும் ஆஜராகியிருந்தார்கள். பின்னர் தீர்ப்பை அளித்த நீதிபதி கிருஷ்ணன், முத்துலட்சுமி உள்ளிட்ட 11 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மற்ற 13 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 150 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.