பத்திரிகையாளர் மீது தாக்குதல்: தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கைது
சென்னை: சென்னை விமான நிலையில் பத்திரிக்கையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசனை, போலீசார் கைது செய்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தேமுதிகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கும், நிருபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தனியார் டிவி சேனல் நிருபர் பாலுவை, எம்.எல்.ஏ. ஒருவர் கீழே தள்ளிவிட்டார். இது குறித்து பாலு, விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் போலீசார், அவரது புகாருக்கான சான்றிதழ் மட்டும் அளித்துவிட்டு, வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரஸ் மீடியா அசோஷியேசன் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நிருபர் பாலுவை தாக்கிய எம்.எல்.ஏ. ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசனை இன்று போலீசார் கைது செய்தனர். இவர் செங்கல்பட்டு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.