இளைய ஆதீனப் பதவியில் இருந்த நித்யானந்தா நீக்கம்: அரசுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை!
சென்னை: மதுரை இளைய ஆதீனப் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டது தொடர்பாக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை ஆதீனகர்த்தராக இருப்பவர் அருணகிரிநாதர். இவருக்கு இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களான ஜெகதலபிரதாபன், கிருஷ்ணமூர்த்தி, கவுதம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. கடந்த 19ம் தேதியுடன் இருத்தரப்பு வாதங்களும் முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டதாக, மதுரை ஆதீனம் அறிவித்தது. எனவே இது குறித்த சில தெளிவுகளை பெறுவதற்காக இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை, ஜெகதலபிரதாபன் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.சந்திரன் ஆஜரானார்கள்.
அப்போது மதுரை ஆதீனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், இளைய ஆதீனத்தில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளார். அதை அருணகிரிநாதர் தபால் மூலம் அனுப்பி இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அது கிடைத்த பிறகு விரிவாக வாதிட முடியும் என்றும் தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், இந்த நீக்கம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அரசுக்கு தகவல் வந்துள்ளதா என்று கேட்டார்.
உடனே அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மதுரை ஆதீனத்தில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்துசமய அறநிலையத்துறைக்கும் அரசுக்கும் வந்து சேரவில்லை என்று கூறினார். இதையடுத்து இது குறித்த விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.