ராம்னியின் தீவிர ஆதரவாளர் ஒபாமாவுக்கு புகழாரம் – அமெரிக்க அரசியலை தாக்கிய சான்டி!
இந்த கடைசி நேரத்தில் இரண்டில் ஒரு வேட்பாளர் மீது ஏதாவது அதிர்ச்சியான தகவல்கள் வெளியானால், தேர்தலின் போக்கே திசை மாறிப்போய்விடும்.
1972 ஆம் ஆண்டு நிக்சன் மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸிஞ்சர், வெள்ளை மாளிகையில் வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்வு கையில் இருக்கிறது என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.
நிக்சன் நாடு முழுவதும் 20 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அது முதல் ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி அக்டோபர் மாதம் ஏதாவது முக்கிய செய்தி தேர்தலை திசை திருப்பும் வகையில் அமைந்தால் ‘அக்டோபர் அதிர்ச்சி' என்று அழைக்கப்படுகிறது. அக்டோபர் வந்தாலே அப்படி ஒரு வித எதிர்ப்பார்ப்புகளும் உருவாகிவிட்டது.
காமெடியாகிப் போன டொனால்டு ட்ரம்ப்
2012 ம் ஆண்டு தேர்தலில் இப்படி அக்டோபர் அதிர்ச்சியை தான் கொடுக்கப்போகிறேன் என்று பிரபல பெரும் பணக்காரரும், தற்போது குடியரசுக் கட்சியின் ஆதரவாளருமான டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.
அநேகமாக ஒபாமாவை குறிவைத்துத் தான் ஏதாவது சொல்லப் போகிறார் என்று மீடியா பரபரப்பு கிளப்பிக்கொண்டிருந்த வேளையில் பொசுக்கென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஒபாமா தனது கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை வெளியிட்டால், ஒபாமா விரும்பும் அறக்கட்டளைக்கு 5 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளிக்கத் தயார் என்று அறிவித்தார். அது எந்த பரபரப்பும் இல்லாமல் புஸ்வாணமாகிப் போய் விட்டது.
நண்பரின் விவாகரத்து வழக்கில் ராம்னி சாட்சியம்
1989 ஆம் ஆண்டு தனது நண்பர் டாம் ஸ்டெம்பெர்க் விவாரத்து வழக்கில் ராம்னி அளித்த சாட்சியத்தை பொதுமக்களுக்கு வெளியிடவேண்டும் என்று பாஸ்டன் க்ளோப் பத்திரிக்கை நீதிமன்ற வழக்கு தொடர்ந்தது.
முதலில் இந்த விவரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் விவாகரத்தான மனைவி மௌரின், அதை பத்திரிக்கையில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் ஆல்ரெட் மூலம் மனு அளித்தார். இறுதியில் ராம்னியின் சாட்சியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல நூறு பக்கங்கள் கொண்ட இந்த சாட்சியத்தில் ராம்னிக்கு எதிரான பெரிய விஷயங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் பொய்யாகி விட்டது.
கிறிஸ்... சான்டி கொண்டு வந்த அக்டோபர் அதிர்ச்சி?
அக்டோபர் மாதம் முடியும் தருவாயில் கூட ஏதும் தேர்தலில் திருப்பத்தை உருவாக்கக் கூடிய நிகழ்வுகள் இல்லையே! 2012ம் ஆண்டு தேர்தலில் அக்டோபர் அதிர்ச்சி இல்லாமல், வித்தியாசமாக அமைந்து விடுமா என்று அரசியல் பார்வையாளார்கள் கருதினர்.
இந் நிலையில் ராம்னியின் அதி தீவிர ஆதரவாளரும், நியூஜெர்ஸி கவர்னருமான கிறிஸ் கிறிஸ்டி சான்டி புயல் நிவாரணப்பணிகளுக்காக அதிபர் ஒபாமாவை புகழ்ந்து பேசியுள்ளது ராம்னி வட்டாரத்தில் கவலையை உருவாக்கி உள்ளது.
புதன்கிழமை காலை என்.பி.சி யின் ‘டுடே' நிகழ்ச்சியில் பேசிய கிறிஸ்டி, ‘அதிபர் ஒபாமா மிகவும் திறமையாக செயல்பட்டார்' எனவும் எம்.எஸ்.என்.பி.சி யின் 'மார்னிங் ஜோ' நிகழ்ச்சியில் ‘ சான்டி நிவாரணப் பணியில் ஒபாமாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது. ஒபாமாவும் அவரது நிர்வாகத்தில் பணியாற்றும் நிர்வாகக் குழுவும் எங்கள் மாநிலத்துடன் மிகவும் இணக்கமான முறையில் ஒருங்கிணைந்து பணியாற்றினர். அது மிக்க மகிழ்ச்சியான விஷயம்' என்றும் குறிப்பிட்டார்.
ஒபாமாவின் அரசியல் கலக்காத நிவாரணப் பணி
முன்னதாக சி.என்.என் தொலைக்காட்சியில் ‘அதிபர் ஒபாமா எனக்காக மிகவும் மெனக்கட்டு, எந்த நேரத்திலும் நேரடியாக பேசுவதற்கு அனுமதியும் நேரடி தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். அவர் அப்படி சொன்னது மிகவும் நிஜமான அக்கறையில் எனபது எனக்கு நன்றாக புரிந்து விட்டது. எங்கள் உரையாடலில் ஒரு முறை கூட மறந்தும் அரசியல் லாபத்துடன் எந்த கருத்தையும் ஒபாமா சொல்லவில்லை என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் அவரே அரசியல் சார்ந்து எந்த கருத்தையும் முன் வைக்காத போது நியூஜெர்ஸி மக்கள் எந்த வித கவலையும் படத் தேவையில்லை தானே!' என்று கிறிஸ் குறிப்பிட்டிருந்தார்.
ஒபாமாவும் கிறிஸ்-ம் இணைந்து நியூ ஜெர்ஸியின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ள நிலையில், ராம்னியும் நியூஜெர்ஸியில் பார்வையிட விருப்பம் தெரிவித்திருந்தார். அது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது எனபதால், உடனடியாக நிராகரித்து விட்டார் கிறிஸ். எனது மாநிலத்தில் உடனடி நிவாரணப் பணிகள் தான் எனக்கு முக்கியம்.
அதிபர் தேர்தல் அரசியல் குறித்து கவலைப்பட எனக்கு நேரமில்லை என்று காட்டமாகவும் அவர் கூறியுள்ளார்.
ராம்னியை ஆதரித்து குடியரசுக் கட்சி மாநாட்டில் சிறப்புரையாற்றிய கிறிஸ் இவ்வாறு ஒபாமாவை புகழ்ந்து அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் பேட்டி கொடுப்பார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ராம்னியை நியூஜெர்ஸிக்கு வரவிடாமல் தடுப்பார் என்று கனவிலும் யாரும் நினைக்கவில்லை. அதானல் 'கிறிஸ் கிறிஸ்டி தான் அக்டோபர் அதிர்ச்சியா?' என்று கேள்விகள் எழுந்துள்ளன.
-ஒன்இந்தியா ஸ்பெஷல்