ஏழைகளின் சிறுநீரக- கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கூடுதல் செலவை அரசே ஏற்கும்: ஜெ.
சட்டப் பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வாசித்தார். அதில்,
மருத்துவமனை கட்டிடங்களை பராமரிக்கவும், மருத்துவமனைகளில் தொய்வின்றி சேவை மேற் கொள்ளும் பொருட்டு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க கூடுதலாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ மனைகளில் மருந்துகள் வாங்குவதற்கும்; உயிர் காக்கும் உயர் ரக மருந்து கள் வாங்குவதற்கும்; ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 284 கோடி ரூபாய் உடன் கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளார்.
"முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இடம் பெற்றுள்ள குறிப்பிட்ட 77 நோய்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை சிகிச்சை மேற்கொள்ள அனு மதிக்கப்படுகிறது.
இதில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மருந்துகள், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு ஆகிறது என்பதால் இந்த கூடுதல் செலவினத்தை,அரசே ஏற்கும் வகையில் ஒரு சிறப்பு தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும்
என்றும் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் கூறினார். இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் காப்பீட்டு தொகையிலிருந்து இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்காக ஆண்டொன்றிற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மிக அருமையான இந்த அறிவிப்புக்காக முதல்வரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.