பரமக்குடி கலவரம்: 2 கிராமத்தைச் சேர்ந்த 250 பேர் மீது வழக்கு
பரமக்குடி: பரமக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 250 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்கு சென்றபோது பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் சிலர் கற்களால் தாக்கியதில் டி.வேலங்குடியைச் சேர்ந்த சிவக்குமார்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே போல் திருப்புவனம் அல்லிநகரத்தைச் சேர்ந்த மலைக்கண்ணன்(23), கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரமணி(22) ஆகியோர் பொன்னையாபுரம் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதில் பலியாகினர். இதைத் தொடர்ந்து பரமக்குடி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 3 பேர் படுகொலை தொடர்பாக பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் மீதும், பொன்னையாபுரத்தைச் சேர்ந்த 150 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பாம்புவிழுந்தானைச் சேர்ந்த பழனிமுருகன்(28), பாண்டி(45), சிங்கதுரை(32), மோகன்(42), பொன்னையாபுரம் பாலன்நகர் பகுதியைச் சேர்ந்த கதிர்காமன்(23), மலைராஜ்(55), மூர்த்தி(40), பெரியசாமி(39), பாண்டி(20), பழனி(35), குருசாமி(50) ஆகிய 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு, அவர்கள் பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே பதட்டத்தை தணிக்க பரமக்குடி முழுவதும் கலவரத் தடுப்பு போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.