நெல்லை, தூத்துக்குடியில் 4வது நாளாக இரவில் பஸ்கள் நிறுத்தம்: ஆட்டோக்களுக்கு கிராக்கி
நெல்லை: பரமக்குடி கலவரத்தையடுத்து நெல்லை, தூத்துக்குடியில் 4வது நாளாக இரவு நேரத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று பரமக்குடியில் நடந்த மோதலைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றுடன் 3 நாட்களாக பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து சங்கரன்கோவில், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பை, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இரவு 8 மணிக்கு பிறகு இயக்கப்படவில்லை. காலை 8 மணிக்கு பிறகே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. வெளியூர் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் நகருக்கு வெளியே ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 8 முதல் 10 பஸ்களாக சேர்த்து அனுப்பப்பட்டன. அம்பை, பாபநாசம், சேரன்மகாதேவி செல்லும் பஸ்கள் முன்னீர்பள்ளத்தில் நிறுத்தப்பட்டு மொத்தமாக அணிவகுத்து சென்றன.
அதேபோல் சாத்தான்குளம், முனைஞ்சிபட்டி செல்லும் பஸ்கள் ரெட்டியார்பட்டியில் நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. சங்கரன்கோவில், தென்காசி போன்ற பகுதிகளில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. தற்போது தீபாவளி நேரமாக இருப்பதால் ஜவுளி கடைகளுக்கு துணி மற்றும் பண்டிகை பொருட்கள் வாங்குவதற்காக வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு் உள்ளாகி வருகின்றனர். இதனால் வேன், ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவும் 4வது நாளாக பஸ்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.