தீபாவளி பண்டிகைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் உரிமம் ரத்து
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க 6 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் வெளியூருக்கு தினந்தோறும் 1,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தினந்தோறும் 4 லட்சம் பயணிகள் வெளியூருக்கு செல்கிறார்கள். பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை சுமார் 6 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.
அரசு பஸ்களைப் போல் ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயரும்போது எல்லாம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூல் செய்கின்றன.
இது போன்று அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சட்டப் போரவையில் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் உயர் அதிகாரிகளின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க 6 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆர்டிஓ தலைமையில் 2 இன்ஸ்பெக்டர் என 3 பேர் இருப்பார்கள். இந்த குழு சென்னையில் கோயம்பேடு, எழும்பூர், தி.நகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உட்பட பல்வேறு இடங்களில் திடீரென ஆய்வு நடத்தி, பஸ்களில் அதிக சுமை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.
ஆம்னி பஸ்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் 9444855428, 9444015958 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு சம்பவ இடம், டிராவல்ஸ் பெயர், பஸ் நம்பர், கட்டண விபரங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விவரம் தெரிவித்தால் அது குறித்து உரிய நவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அதிக கட்டணம் வசூலிப்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட பஸ் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.