பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டேன்... ஜெ. அறிவிப்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சாலை போக்குவரத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சாலை போக்குவரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மோசமான நிலைமையில் இருந்த அர போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்து கழகங்களுக்கு நிதி உதவி அளித்தல், புதிய பஸ்களை வாங்குதல், பழைய பஸ்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அதையடுத்து, அரசு போக்குவரத்து கழகங்கள் முன்னேற்றப்பாதையில் செல்வதுடன், திறமையான, இடர்பாடற்ற மற்றும் பாதுகாப்பான சேவையை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், 14.9.2012 முதல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, லிட்டர் ஒன்றுக்கு 43 ரூபாய் 91 காசு என்றிருந்த டீசல் விலை 49 ரூபாய் 98 காசாக உயர்ந்தது. அதாவது, ஒரு லிட்டர் டீசலின் விலை 6 ரூபாய் 7 காசு என்ற அளவிற்கு அதிகரித்தது.
இந்த டீசல் விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 5 கோடியே 24 லட்சம் லிட்டர் டீசலை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. 14.9.2012 அன்று முதல் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்துவதற்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களின் மாதாந்திர எரிபொருள் செலவினம் 230 கோடியே 8 லட்சம் ரூபாய் என்ற அளவில் இருந்தது.
டீசல் விலை உயர்விற்கு பிறகு, எரிபொருளுக்கான மாதாந்திர செலவினம் 261 கோடியே 90 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிட்டது. அதாவது, டீசல் விலை உயர்வினால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 31 கோடியே 82 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த டீசல் விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டொன்றிற்கு 381 கோடியே 81 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
2012 -2013ம் நிதியாண்டில் மட்டும், அதாவது 14.9.2012 முதல் 31.3.2013 வரையிலான காலத்திற்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதலாக 206 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இந்த இழப்பீட்டை ஈடுகட்ட வேண்டுமென்றால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பஸ் கட்டணங்களை உயர்த்த வேண்டும்.
இருப்பினும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை ஈடு செய்யும் வகையிலும், இந்த கூடுதல் செலவை அரசே ஏற்க முடிவு செய்துள்ளது. இதற்கென முதல் துணை மதிப்பீட்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2ம்ந்தேதி அன்று சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.