மீண்டும் வருகிறது ‘தேமுதிக’ புயல்... கரையைக் கடக்கும் போது முரசு முடங்கும்?
சென்னை: தமிழக அரசியலில் கடந்த ஒருவார காலம் ஓய்ந்துகிடக்கும் ‘தேமுதிக' எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓடும் விவகாரம் மீண்டும் விஸ்வரூப புயலாக உருவெடுக்க இருக்கிறது. ஆனால் இம்முறை இந்தப் புயல் 'முரசு' சின்னத்தை முடக்கி ‘விஜயகாந்தை' கட்சியைவிட்டே நீக்கும் அளவுக்கு கரையைக் கடக்கலாம் என்று கூறப்படுகிறது.
தேமுதிக (ஜெ) அணி...
தேமுதிக எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜனும் தமிழழகனும் முதலில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அதன் பின்னர் அருண்பாண்டியனும் மைக்கேல் ராயப்பனும் ஜெயலலிதாவை சந்திக்க உதயமானது தேமுதிக (ஜெ) அணி.
கமுக்கமாகிவிட்ட கேப்டன்
இந்த அணியில் இணையும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 12 ஆக இருக்கலாம்.. அவர் போகிறார்.. இவர் போகிறார் என்றெல்லாம் யூகங்கள் வந்த நிலையில் விஜயகாந்த் தரப்பு பதிலடி கொடுப்பதாக நினைத்து நாங்களும் முதல்வரை சந்திக்கிறோம் என்று ஸ்டண்ட் அடிக்க அது சட்டசபையில் உரிமை மீறல் விவகாரமாக வெடித்தது.
இந்நிலையில் விமான நிலையத்தில் நிருபரைத் தாக்கிய வழக்கில் விஜயகாந்தும் உள்ளே போகும் நிலையில் முன் ஜாமீன் வாங்கி கமுக்கமாகிவிட்டார் கேப்டன்.
'ஒரிஜனல்' தேமுதிக
தற்போது சட்டசபைக் கூட்டம் முடிவடைந்துவிட்டது. தேமுதிக ஒரேயடியாக உடைத்தாக வேண்டும் என்ற கங்கணத்தில் அதிமுக வலைவீசி வைத்திருக்கிறது. தற்போது சிக்கும் தேமுதிக எம்.எல்.ஏ.க்களை வைத்து அரசியல் புயலை உருவாக்க முடிவு செய்திருக்கிறதாம் அதிமுக.
15 தேமுதிக எம்.எல்.ஏக்களை அணி சேர்த்து நாங்கள் தான் ‘ஒரிஜனல்' தேமுதிக என்று உரிமை கோர வைத்து இந்த புயலில் தேமுதிகவின் முரசு சின்னத்தை அப்படியே முடக்கிப் போடுவதுதான் அதிமுகவின் ப்ளான் என்கிறார்கள். அப்படி முரசு சின்னம் கிடைக்காமல் போனால் வரப்போகும் மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு செம அடி விழும் என்பதுதான் அதிமுகவின் எதிர்பார்ப்பு.
பண்ருட்டி ராமச்சந்திரனே தலைமையா?
அதிமுக உருவாக்கும் ‘தேமுதிக'வுக்கு அனேகமாக பண்ருட்டி ராமச்சந்திரனே தலைமை வகிக்கும் நிலையும்கூட வரலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் வாய்ப்பைப் பறிப்பது...
விஜயகாந்த்தின் மீது இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு மட்டுமல்ல. தே.மு.தி.கவின் அரசியல் ரீதியான வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜெயலலிதா நினைக்கக்கூடும். சில எம்.எல்.ஏக்களைப் பிரித்து கட்சியை உடைப்பதன் மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பறிப்பது, ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவி தே.மு.தி.கவிற்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பறிப்பது, தொண்டர்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்துவது. இதுதான் திட்டமாக இருக்க வேண்டும்.
தி.மு.கவை நெருங்கிச் செல்கிறார்...
தே.மு.தி.கவின் மீதான இந்தத் தாக்குதலுக்கு இன்னொரு முக்கியமான காரணம் அவர் தி.மு.கவை நெருங்கிச் செல்கிறார் என்கிற சந்தேகம்தான்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பெரிய கூட்டணியை தி.மு.க. அமைத்தால் அதில் தே.மு.தி.க. முக்கியமான சக்தியாக திகழும் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். தற்போது மக்களிடம் மின்வெட்டு, விலைவாசி உயர்வினால் நிலவும் கடும் அதிருப்தி அ.தி.மு.கவுக்கு எதிராக போகக்கூடிய வாய்ப்பு இருக்கும் சூழலில் தே.மு.தி.கவை பலவீனப்படுத்துவது ஜெயலலிதாவின் முக்கியமான அரசியல் திட்டமாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அடிக்கப் போகிற புயலில் கரைசேருவாரா கேப்டன்?