போடியில் தேவர் சிலை அவமதிப்பு- மதுரை தினமணி அலுவலம் மீது கல்வீச்சு
மதுரை: போடியில் தேவர் சிலையை அவமதிப்பு செய்த நபர்களை கைது செய்ய கோரி, போராட்டம் நடைபெற்றால், பதட்டம் ஏற்பட்டது. அதேபோல தேவர் குரு பூஜைக்கு சென்றவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்ற வன்முறையில், மதுரை தினமணி பத்திரிக்கை அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்த தேவாரம் காவல் நிலையம் முன்னே தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் மீது கடந்த 3ம் தேதி சில மர்மநபர்கள் சேர்ந்து சாணம் போன்ற பொருட்கள் வீசி அவமதித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று தேவாரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், போடி டி.எஸ்.பி. அருள்அமரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதட்டத்தை தொடர்ந்து தேவாரம் பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வன்முறையில் ஈடுபடாமல் இருக்க, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ஆகியோர் குறிப்பிட்ட சமூகத்தினரிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தேவர் சிலையை அவமதிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சமாதானம் அடைந்த அவர்கள், தேவர் சிலை கழுவி சுத்தம் செய்து, பால் அபிஷேகம் செய்தனர்.
இந்த நிலையில் பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் எஸ்.ஆர்.தமிழன் தலைமையில் ஏராளமானோர், தேவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய கோரி போடி-உத்தமபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி அலுவலகம் மீது 'அட்டாக்':
இந்த நிலையில் பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு சென்றவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியானதை கண்டித்து, மதுரை புளியங்குளத்தில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரை விரகனூர் சுற்றுச்சாலை வழியாக சென்ற வன்முறை கும்பல், அப்பகுதியில் இருந்த அலுவலகங்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தியது. மாலை 4 மணி அளவில் தினமணி- தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவன அலுவலகத்தின் கட்டிடத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலகத்தின் முன்பகுதியில் இருந்த கண்ணாடி தடுப்புகள், ஜன்னல்கள் ஆகியவை சேதம் அடைந்தன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.