'தொகுதி வளர்ச்சி' சம்பந்தமாக அமைச்சரைப் பார்த்தார் தேமுதிக மைக்கேல் ராயப்பன்!
சமீபத்தில் தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுந்தரராஜன், அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். இதனால் தேமுதிகவில் பெரும் குடைச்சல் ஏற்பட்டுள்ளது.
தொகுதி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவே முதல்வரை சந்தித்ததாகவும், இதற்கெல்லாம் விஜயகாந்த்திடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றும் இவர்கள் கூறினர். மேலும் விஜயகாந்த்துக்கு சவால் விடும் வகையிலும் பேசினர்.
இந்த நிலையில் நெல்லை வந்த மைக்கேல் ராயப்பன், நேற்று வள்ளியூர் போனார். பின்னர் செங்கோட்டைக்கு வந்து அங்கு தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியனை சந்தித்து பேசினார். அப்போது அவர் தன்னுடைய தொகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உதவ வேண்டும் என்று செந்தூர் பாண்டியனிடம் மனு கொடுத்தார்.
மீண்டும் முதல்வரைச் சந்திப்பேன் என்று நேற்று செய்தியாளர்களிடம் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.