ஒரிசாவில் ரூ.4 லட்சம் கோடி சுரங்க ஊழல்!!!: நவீன் பட்நாயக் பதவி விலக காங். கோரிக்கை
இது குறித்து காங்கிரஸைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஒரிசா மாநிலத்தில் நடந்துள்ள சுரங்க ஊழலால் அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் கர்நாடகா மற்றும் கோவாவில் நடந்த சுரங்க ஊழல்களை விடப் பெரியது. ஒரிசா அரசுக்கு தெரிந்தே ரூ.4 லட்சம் கோடி சுரண்டப்பட்டுள்ளது. இதில் ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு பங்கு உள்ளது. எனவே அவர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
முதல்வருக்குத் தெரியாமல் எல்லாம் இவ்வளவு பெரிய ஊழல் நடக்க முடியாது. சட்டவிரோதமாக சுரங்கங்கள் நடத்திய 27 நிறுவனங்களுக்கு ரூ.58,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த 27 பேருடன் முதல்வருக்கு தொடர்புள்ளது. பட்நாயக்குடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்.
பட்நாயக்கின் உண்மையான முகம் தற்போது தான் தெரிய வந்துள்ளது. ஒரிசாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் நடக்கிறது. பட்நாயக் மாநிலத்தில் உள்ள பாக்சைட் சுரங்கங்களை எல்லாம் விற்றுவிட்டார் என்றார்.