பண்ருட்டி அருகே குடோனில் பயங்கர தீ: ரூ.2 கோடி முந்திரி, மரச்சாமான்கள் நாசம்
கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள தனியார் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள முந்திரி பருப்பு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலிரில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோனின் ஒரு பகுதியில் முந்திரி நிறுவனம் ஒன்று 3,200 முந்திரி மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது. குடோனில் உள்ள மற்றொரு பகுதியில் உள்ள அறையில் 2 கன்டெய்னர் லாரிகளில் வந்த மரச்சாமான்களை இறக்கி வைக்க தொழிலாளர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்தனர்.
அவர்கள் வந்தபோது மின்சாரம் இல்லாததால் அவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து மரச்சாமான்களை இறக்கினர். பிறகு மெழுகுவர்த்தியை அணைக்காமலேயே கதவை பூட்டிவிட்டு கிளம்பினர். அவர்கள் கிளம்பிய சற்று நேரத்தில் மெழுகுவர்த்தி சாய்ந்து மரச்சாமான்கள் மீது தீ பற்றியது. இந்த தீ குடோனின் மற்றொரு பகுதியில் இருந்த முந்திரி மூட்டைகளுக்கும் பரவியது.
இதனால் அறையில் இருந்து புகை கிளம்பியது. இதைப் பார்த்த காவலாளி உடனே இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
புகை மண்டலம் காரணமாக கதவை உடைத்து உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குடோனின் ஒரு பகுதி சுவரை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்றனர். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள முந்திரி மூட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் எரிந்து சாம்பலாகின. காடாம்புலிர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.