லேப்டாப் கிடைக்காத மாணவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பும் பிரின்சிபால்கள் மீது நடவடிக்கை: ஆசிஷ்
தூத்துக்குடி: அரசின் இலவச லேப்டாப் கிடைக்காத மாணவர்களை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்குமாறு அனுப்பி வைக்கும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. சுயநிதி பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் கிடையாது. லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளுக்காக கணக்கெடுப்பு நடந்தபோது சில பள்ளி, கல்லூரிகளில் தவறுதலாக சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களும் கணக்கெடுக்கப்பட்டுவிட்டனர்.
இந்த தவறால் சில பகுதிகளில் சுயநிதி பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. அதனை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுயநிதி பாடப்பிரிவு மாணவர்கள் தங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்ப அவர்களுக்கும் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும கல்லூரிகளின் முதல்வர்கள் லேப்டாப் கிடைக்காத மாணவர்களை கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு திசை திருப்பி விடுகின்றனர். இது தவறான செயலாகும். லேப்டாப் கேட்டு மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.