கொடைக்கானல் மலை அடிவாரத்தில் செக்போஸ்ட் திறப்பு: 'குடிமகன்களுக்கு' ஆப்பு!
கொடைக்கானல்: கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள செக் போஸ்ட்டை டி.ஐ.ஜி. அன்புச் செல்வன் திறந்து வைத்தார்.
வத்தலக்குண்டு-கொடைக்கானல் ரோட்டில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் செக்போஸ்ட் இல்லாமல் இருந்ததால், கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிலர் குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வதும், மலை சாலையில் மது அருந்திவிட்டு, பாட்டில்களை ரோட்டில் உடைப்பதும் என பல்வேறு குற்றங்களை செய்து வந்தனர். இதனை தடுக்க வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மாவட்ட போலீஸ் சார்பில் செக்போஸ்ட் திறக்க வேண்டும் என மக்கள் கடந்த பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட செக்போஸ்ட்டை டி.ஐ.ஜி. அன்புச் செல்வன் திறந்து வைத்தார்.
செக்போஸ்ட்டை திறந்து வைத்து அவர் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகத் தான் செக்போஸ்ட் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தேவதானப்பட்டி, தாண்டிக்குடி, கொடைக்கானல் காவல் நிலையங்களைச் சேர்ந்த தலா ஒரு எஸ்.ஐ.யும், வாகன சோதனைக்கு ஆயுதப்படை போலீசாரும் பணியில் இருப்பார்கள் என்றார்.