முதலீட்டாளர்களின் அபரிமிதமான நம்பிக்கையுடன் வளர்ச்சிப் பாதையில் தமிழகம்- ஜெ. பெருமிதம்
தமிழகத்தில் 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் 12 நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 2011 மே மாதம் முதல் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, 68 ஆயிரத்து 527 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை ஈர்த்துள்ளதாக, மத்திய அரசின் தொழில் வணிகத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.மீண்டும் தமிழகம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதற்கு இந்த புள்ளிவிவரங்களே ஒரு எடுத்துக் காட்டுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை காண்பது மற்றொருபுறம் என ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையில் தமிழகம் சென்று கொண்டிருப்பதாகவும் முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அந்நிய நேரடி முதலீட்டை பொறுத்தவரை அரசு மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டியிருப்பதால், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த ஆண்டு அரசு வெளியிட உள்ள தொழில் கொள்கை தமிழகத்தை முதலீட்டாளர்களுக்கு மேலும் உகந்ததாக மாற்றும் என்றும் முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார்.
கையெழுத்தான 12 நிறுவனங்கள்
தமிழகத்தில் பிரபலமான முருகப்பா குழும நிறுவனம் சைக்கிள், ஸ்கூட்டர் உதிரிபாகங்கள் இரும்பு குழாய், தொழிற்சாலைகளுக்கான உபபொருட்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் ஆலையை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைக்கிறது. ரூ. 500 கோடி முதலீட்டிலான இவ்வாலைகள் 1130 பேருக்கு வேலை தரும்.
டிவிஎஸ் நிறுவனம் சென்னை, ஒரகடம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூர் ஆகிய இடங்களில் உள்ள தனது ஆலைகளில் ரூ.700 கோடி செலவில் விரிவாக்க பணிகளை மேற்கொள்கிறது. இதனால் புதிதாக 1300 வேலைவாய்ப்புகள் உருவாகும் .
அமெரிக்காவின் பிபிஜி நிறுவனமும், இந்திய நிறுவனமான ஹர்ஷாவும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃப்லோட் கிளாஸ் மற்றும் ஃபைபர் கிளாஸ் தயாரிக்கும் ஆலையை அமைக்கின்றன. ரூ. 4100 கோடி முதலீட்டில் அமையும் இந்த ஆலையில் ஆயிரத்து 850 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பிஜிஆர் எனர்ஜி நிறுவனமும் புகழ்பெற்ற ஹிட்டாச்சி நிறுவனமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டில் ஜெனரேட்டர், டர்பைன், பாய்லர் தயாரிப்பு ஆலையை அமைக்கின்றன. 2,400 பேருக்கு வேலைவாய்ப்பு தர வாய்ப்புள்ள இந்த ஆலை ரூ.2,325 கோடி முதலீட்டில் அமைகிறது.
பன்னாட்டு நிறுவனமான ஆம்வே, வீட்டு உபயோக பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலையை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைக்கிறது.
இந்தோ ராமா குழுமம் பெட்ரோ கெமிக்கல் மற்றும் சிந்தடிக் ஃபைபர் தயாரிப்பு ஆலைகளை ரூ. 4,500 கோடி முதலீட்டில் அமைக்கிறது. சென்னை, எண்ணூர், கோவையில் அமைய உள்ள இவ்வாலைகள் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு தரும்.
ஏடிடி ஜவுளி தொழிற்பூங்கா, கோவை அருகே அன்னூரில் நிறுவப்பட உள்ளது. ரூ. 3,100 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த பூங்கா, இன்னும் 7 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு வேலை தரும்.
டென்மார்க் நாட்டின் டான்ஃபோஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனது ஆலையை ரூ. 500 கோடி செலவில் விரிவாக்குகிறது. தொழிற்சாலை இயந்திரங்களைத் தயாரித்துவரும் இந்த ஆலையில் 1200 பேர் கூடுதலாக வேலைவாய்ப்பு பெறுவர்.
நோக்கியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையை ரூ.250 கோடி செலவில் விரிவாக்குகிறது. இதனால் 500 பேர் வேலை பெறுவர்.
ஹுண்டாய் கார் நிறுவனத்தி்ன் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக் கோட்டை ஆலை ரூ.4000 கோடி செலவில் விஸ்தரிக்கப்படுகிறது. இதனால் புதிதாக 500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அமெரிக்காவின் சான்மினா நிறுவனம், ஒரகடத்தில் தனது ஆலையை ரூ.250 கோடி செலவில் விரிவாக்குகிறது. எலக்ட்ரானிக் ஹார்டுவேர் பொருட்களை தயாரிக்கும் இந்நிறுவனத்தில் 1500 பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெறுவர்.
இந்த புதிய அறிவிப்புகளால் அதிக பலன் அடையப் போவது. காஞ்சிபுரம் மாவட்டம்தான். இங்கு புதிய ஆலைகள், விரிவாக்க பணிகள் என மொத்தமாக 9 முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.