அசிங்கமாகப் பேசிய போலீஸ்காரரை அடித்து நொறுக்கிய நர்ஸிங் மாணவிகள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நர்ஸிங் மாணவிகள் விடுதிக்கு வெளியே நின்று கொண்டு அசிங்கமாகப் பேசிய போலீஸ்காரரை மாணவிகள் நையப் புடைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நர்ஸிங் கல்லூரி விடுதிக்கு வெளியே கலெக்டர் அலுவலகத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சங்கர் லால் என்பவர் நின்றுள்ளார். அவர் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை அசிங்கமாகப் பேசி கிண்டலடித்துள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகள் அவரைப் பிடித்து அடித்து உதைத்தனர். ஒரு வேளை அவர் குடிபோதையில் தான் இப்படி செய்கிறாரோ என்று நினைத்து பரிசோதனை செய்ய அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதனையில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்தது. இதற்கிடையே பொது இடத்தில் அநாகரீகமாக நடந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.