திருப்பூரில் அதிமுக கவுன்சிலர் 'காட்டன்' முத்து வெட்டிக் கொலை
திருப்பூர்: திருப்பூரில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அதிமுக கவுன்சிலர் காட்டன் முத்து மர்ம மனிதர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் கொடிக்கம்பம் அருகில் உள்ள என்.ஆர்.கே. புரத்தைச் சேர்ந்தவர் காட்டன் முத்து (60). 22வது வார்டு அதிமுக கவுன்சிலர். அவரது மனைவி சுப்புலட்சுமி. அவர்களுக்கு சித்ரா, காந்திமதி என்ற 2 மகள்கள் உள்ளனர். காட்டன் முத்து இரவு நேரத்தில் வீட்டுக்கு முன்பு கட்டில் போட்டு தூங்கும் பழக்கமுள்ளவர். நேற்றிரவும் வீட்டுக்கு முன்பு கட்டில் போட்டு தூங்கினார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் அங்கு வந்து முத்துவின் கழுத்தில் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை அவரது மனைவி சுப்புலட்சுமி கதவைத் திறந்து வெளியே வந்தபோது தனது கணவர் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என் கணவரை கொன்றுவிட்டார்களே என்று அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காட்டன் முத்து 3 முறை கவுன்சிலராக இருந்தவர். அவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான அதிமுகவினர் சம்பவ இடத்தில் திரண்டுவிட்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அரசியல் முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.