நிருபரை தள்ளி விட்ட வழக்கு..போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்ட தேமுதிக எம்.எல்.ஏ.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஜெயா டிவி நிருபர் பாலுவை தள்ளி விட்டுத் தாக்கிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்துள்ள செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ அனகை முருகேசன் ஜாமீன் நிபந்தனைப்படி மீனம்பாக்கம் விமான நிலைய காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
அக்டோபர்27ம் தேதி மதுரைக்குப் போவதற்காக சென்னை விமான நிலையம் வந்தார் விஜயகாந்த். அப்போது அவருக்கும் ஜெயா டிவி செய்தியாளர் பாலுவுக்கும் இடையே கடும் வாதம் மூண்டது. அந்த சமயத்தில் இந்த அனகை முருகேசன், நிருபர் பாலுவை தள்ளி விட்டுத் தாக்கினார். இதையடுத்து பாலு போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் முருகேசன் கைது செய்யப்பட்டார். விஜயகாந்த் மீதும் வழக்குத் தொரடப்பட்டது. அவர் முன்ஜாமீன் வாங்கித் தப்பி விட்டார்.
அனகை முருகேசனுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.
அதன்படி இன்று அவர் மீனம்பாக்கம் விமான நிலைய காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார். அவருடன் தேமுதிகவினரும் நிறைய பேர் வந்திருந்தனர்.