''இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்''… பரபரப்பான தி ஹிந்து விளம்பரம்
விவாதம் தொடங்குகிறது. ஒருவர் எழுந்து மசோதாவை வாசிக்கிறார்...
மற்ற பிரிவினர் அவரை பேச விடாமல் தடுக்கின்றனர். நாற்காலியை தூக்கி அடிக்கின்றனர்.பேப்பரை கிழித்து முகத்தில் வீசுகின்றனர். ஒரே கூச்சல் குழப்பம் நிலவுகிறது.
அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கூறுகிறார். அந்த மைக்கும் பிடுங்கி உடைக்கப்பட்டுகிறது. கூச்சல் சப்தம் குறைக்கப்பட்டு மெல்லிய இசை ஒலிக்க "பிஹேவ் யுவர் செல்ப், இந்தியா!. யூத் ஆர் வாட்சிங்'( இந்தியாவே நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதை இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்) என்ற வாசகங்கள் திரையில் ஒளிர்கின்றன.
தி ஹிந்து நாளிதழ் தயாரித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இந்த விளம்பரம்தான் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. பெரும்பாலோனோர் விருப்பம் தெரிவிக்கும் இந்த விளம்பரத்தின் மூலம் தி ஹிந்து என்ன சொல்ல வருகிறது?
இது அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கையா? அல்லது வருங்காலத்தில் அரசியல் தலைவர்களாகப் போகும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கின்றனரா? இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தினசரி நிகழ்வு இதுதானா?
தொலைக்காட்சிகளில் லோக்சபா, ராஜ்யசபா நிகழ்வுகள் ஒளிபரப்பாகின்றன. சில சமயங்களில் கூச்சல் குழப்பம் நிகழ்வதுண்டு. ஆனால் நாற்காலிகள் உடைக்கப்படுவதும், மைக் பிடுங்கி அடிக்கப்படுவதும்தான் நாடாளுமன்றத்தின் அன்றாட நிகழ்வு என்பது போல்தானே இந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் வெளிநாட்டவர்கள் இந்தியாவின் நாடாளுமன்றத்தின் தினசரி நிகழ்வே இதுதான் என்று நினைத்துக்கொள்ள மாட்டார்களா?
தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் இடையேயான போர்தான் பெரும்பாலும் அவர்களின் விளம்பரங்களில் எதிரொலிக்கும். ஆனால் இப்பொழுது இந்த புதிய விளம்பரத்தின் மூலம் தி ஹிந்து நாளிதழ் சொல்ல வரும் தகவல்தான் என்ன?
எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம் என்றால் விளம்பரத்தை, விளம்பரமாக பார்த்துவிட்டு விட்டுவிடுங்கள்....