ஒபாமா ஜெயிச்சாச்சு.... ஃப்ளோரிடா என்னாச்சு?
டலஹாஸி(யு.எஸ்): அமெரிக்க தேர்தல் முடிந்து ஒபாமா அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். ஆனால் ஐம்பதில் ஒன்றான ஃப்ளோரிடாவில் இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப்டவில்லை.
எட்டு மில்லியன் வாக்குகள் பதிவான ஃப்ளோரிடாவில் 97 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. ஒபாமா 45 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். ஆனாலும் யார் வெற்றி பெறுவார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.
இன்னமும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 29 வாக்குகள் கொண்ட ஃப்ளோரிடாவில் ராம்னி வெற்றி பெற்றால் கூட அவருக்கு எந்த லாபமும் இல்லை. ஒபாமாவுக்கு நட்டமும் இல்லை. முன்னதாக, மயாமியில் சில வாக்காளர்கள் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்து வாக்களித்துள்ளனர்.
அவர்கள் கடுங்கோபத்துடன், அதிகாரிகள் சரியாக திட்டமிடவில்லை என்று மீடியாக்களிடம் புகார் கூறினர். இப்படி காத்திருந்து வாக்களித்துத் தான் ஆகவேண்டுமா? எல்லாம் சுத்த வேஸ்ட் என்றும் புலம்பித் தள்ளிவிட்டனர்.
வாக்கு சீட்டுக்கு ஆறு பக்கம்
ஒரு முழுப் பக்கத் தாளில் ஒரே ஒரு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாலே நம்மவர்கள் கண்ட இட்த்திலும் குத்தி தள்ளிவிடுகிறார்கள். பாவம் ஃப்ளோரிடாவாசிகள், ஆறு பக்கங்கள் கொண்ட வாக்குச்சீட்டில், அதிபர், செனட், காங்கிரஸ்மேன் மற்றும் மாநில சட்ட திருத்தங்களுக்காக 11 வகையான மசோதா திருத்தங்களிலும் பொறுமையாக ஒவ்வொன்றாக வாக்களிக்க வேண்டும். ஒருத்தர் ஒரு ஓட்டு போட்டு முடியுறதுக்குள்ளேயே மூச்சு வாங்கி விடாதா?
பின்னால் வந்தவர்கள் காத்திருக்காமல் வேறு என்ன செய்ய முடியும். அதிக வாக்கு மையங்கள் வைக்காத்தால் தான் இந்த பிரச்சனை, ஒவ்வொரு தேர்தலிலும் ஃப்ளோரிடாவுக்கே உரித்தான பிரச்சனை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆப்சென்ட் வாக்காளர்களின் அட்டகாசம்
தேர்தல் நாளில் நேரிடையாக வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்கள், முன்னதாக நேரிலோ அல்லது நெருங்கிய உறவினர் மூலமாகவோ ஆப்சென்ட் வாக்குக்கான படிவத்தை பெற்றுச்செல்லலாம். வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேர்தல் நாளில் மாலை 7 மணிக்குள் குறிப்பிட்ட மையத்திற்குள் ஒப்படைக்கப் படவேண்டும். மொத்தம் 4.5 மில்லியன் முன் பதிவு வாக்குகளும், ஆப்சென்ட் வாக்குகளும் பதிவாகியுள்ளன. முடிவு நேரமான 7 மணி அளவில் பல்லாயிரக்காண ஆப்சென்ட் வாக்குகள் வந்து அதிகாரிகளை திணற்டித்து விட்டன.
நாங்க மெதுவாத்தான் எண்ணுவோம்
எங்க வாக்காளர்களுக்கு, வாக்குகளை பதிவு செய்வதற்கும் ரொம்ப நேரம் ஆகும். அதை எண்ணுவதற்க்கு இன்னும் அதிக நேரம் ஆகும் என்று ஹில்ஸ்பரோ கவுண்டி தேர்தல் மேற்பார்வையாளர் எல் லெனார்டு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், "ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பு இருக்கிறது. நாங்க எல்லா வாக்குகளையும் எண்ணியாக வேண்டும். நாங்க செய்யுற வேலையை ஒழுங்கா செய்வோம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் பண்ண முடியாது" என்றார்.
கவுண்டி நிர்வாகங்கள் முடிவுகளை தெரிவிக்கும் வரையிலும், ராணுவ வீரர்களில் வாக்கு வந்து சேர்வதற்கான கால அவகாசம் முடியும் வரையிலும் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாது என்பதால், நவம்பர் 20ம் தேதி வரை ஃப்ளோரிடா முடிவுகளின் சஸ்பென்ஸ் நீடித்துக்கொண்டே இருக்கும்.
ஒபாமா பதவியேற்பதற்கு முன்பாவது வெளியிட்டுவிடுவீங்களா ஃப்ளோரிடா அதிகாரிகளே!