இந்திரா காந்தி மாதிரி சிம்பிளா புடவை கட்டுங்க… இது சோனியாவின் அட்வைஸ்!
ரே பரேலி: இன்றைய இளம் பெண்கள் எளிமையான புடவைகளை உடுத்துங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி கூறியுள்ளார். இந்திரா காந்தியைப் போல எளிமையாக இருப்பதே அழகானது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் ( நிப்ட்) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சோனியா காந்தி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
இந்தியப் பெண்களின் நாகரீகமும் ஆடை உடுத்தும் விதமும் மாறுபட்டு வருகிறது. காட்டன் உடைகளில் கூட வித விதமான அலங்காரங்கள், சரிகைகள், மணிகள் கோர்த்து, வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளை அணிகின்றனர்.
இத்தனை அலங்காரம் செய்து ஒரு ஆடையை அணிவது அவர்களுக்கு சிரமம்தான். நாகரீகம் என்பது உடைகளை அதிகமாக அலங்காரம் செய்வதில் இல்லை. எளிமையில்தான் இருக்கிறது என்றார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஒரு பாரம்பரிய ஆடைகள் உள்ளன. அவை, அவர்களின் வாழ்விடங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனை எப்போதும் நாம் மறக்கக் கூடாது என்று சோனியா காந்தி குறிப்பிட்டார்.
இந்திரா காந்தியின் எளிமை
இந்தியாவின் பிரதமராகவும், ரே பரேலி தொகுதி எம்.பியாகவும் இருந்த இந்திரா காந்தியின் தோற்றத்தில் எளிமையும், பேஷன் என்பதன் மீதான பார்வையும் அவரை உலக அளவில் புகழ்பெற வைத்தது.
அவர் தனது எளிமையான தோற்றத்தின் மூலமே நாகரீகமாகத் தோன்றினார். ஆடைகளில் அலங்காரத்தை அதிகரிக்கலாம். ஆனால், அது நாகரீகத்தை பிரதிபலிக்காது என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் சோனியா காந்தி.