தர்மபுரி கலவரம்: எஸ்.ஐ., உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
தர்மபுரி: தர்மபுரி அருகே தீ வைப்பு கலவரம் சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக கூறி அறியகுளம் காவல் நிலைய எஸ்.ஐ. பெருமாள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரியை அடுத்த செல்லன் கொட்டாயைச் சேர்ந்த இளம்பெண் திவ்யா, நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கே மகன் இளவரசன் என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அறியகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்வதற்காக பெண்ணின் தந்தை நாகராஜ் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இளங்கோவின் உறவினரான எஸ்.ஐ., பெருமாள் என்பவர் புகாரை வாங்க மறுத்ததோடு, நாகராஜாவை கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த இளங்கோ அவரது மகன் இளவரசன், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் நந்தன், உள்ளிட்டோரும் நாகராஜை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த புதனன்றுவிஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ., பெருமாள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகராஜ் மனைவி தேன்மொழி, மீண்டும் அறியகுளம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அப்போதும் போலீஸார் புகாரை வாங்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து நாகராஜை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவு விட கோரி தேன்மொழி தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதி மன்றம் என்-,2, ல் வழக்கு தொடர்ந்தார்.
வியாழக்கிழமையன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, நாகராஜை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ பெருமாள், இளங்கோ, இளவரசன், நந்தன், தர்மபுரி குண்டு சக்தி, மாரவாடி ராஜா, நத்தம் காலனி பொடா. பழனிச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
நாகராஜ் புகார் கொடுத்தபோதே அதன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயிருக்காது. மிகப்பெரிய கலவரமும் ஏற்பட்டிருக்காது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.