தீபாவளி முடிஞ்சி திரும்பி போக ரயில், பஸ் இல்லையே… புலம்பும் பயணிகள்
நாகர்கோவில்: சொந்த ஊரில் தீபாவளியை கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்ப சிறப்பு ரயில் எதுவும் இல்லை என்று தென் மாவட்ட பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வாடிக்கை.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 தினங்களே உள்ளதால் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இம் மாதம் 10, 12-ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் முடிந்துவிட்டது. அதேபோல, தீபாவளிக்கு முன்பாக 2 சிறப்பு ரயில்கள் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று சென்னை சென்ட்ரலுக்கு இம் மாதம் 11-ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கும், மற்றொரு ரயில் எழும்பூருக்கு மாலை 5 மணிக்கும் புறப்படுகின்றன. அவற்றுக்கான முன்பதிவு இப்போது நடைபெறுகிறது.
தீபாவளிக்குப் பின் ரயில் சேவை
ஆனால் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பவும் சென்னை செல்வதற்கு சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என்பது தென்மாவட்ட பயணிகள் கோரிக்கையாகும்.
வழக்கமாக இயக்கப்படும் கன்னியாகுமரி, அனந்தபுரி ரயில்களில் நவ. 13 முதல் 30 வரை முன்பதிவு டிக்கெட் இல்லை. குருவாயூர்-சென்னை ரயிலுக்கும் முன்பதிவு நவ. 13 முதல் 30 வரை முடிந்துவிட்டது. கன்னியாகுமரியிருந்து வாரந்தோறும் புதன்கிழமை எழும்பூர் வழியாக தில்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸிலும் டிக்கெட் இல்லை. அதில் நவ.
14-ம்தேதி முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் 105 பேர் உள்ளனர்.
தென்னக ரயில்வே சார்பில் தீபாவளி முடிந்த பிறகு நாகர்கோவிலிலிருந்து சென்னை செல்ல சிறப்பு ரயில்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர்.
சிறப்பு பேருந்து சேவை
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். எனினும் நாகர்கோவிலிலிருந்து சென்னை, பெங்களூர் செல்ல அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் இம் மாதம் 14, 15-ல் டிக்கெட் இல்லை. 16-ம் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த பேருந்துகளுக்கு முன்பதிவு இல்லை எனக் கூறும் அதிகாரி ஒருவர், பயணிகளுக்கு வசதியாக பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என்றார். எனினும் முன்பதிவு இல் லாவிட்டாலும், டோக்கன் வழங்கினால்கூட நம்பிக்கையுடன் பேருந்தில் செல்ல வாய்ப்பு ஏற்படும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.