திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய கல்லூரி மாணவருக்கு வலை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்து உள்ள கல்லாவி துரைசாமி நகரைச் சேர்ந்தவர் சென்னகேசவன். அவருக்கு 19 வயதில் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்த ராணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணி மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து சென்னகேசவன் கல்லாவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் தனது புகார் மனுவில், எனது மகள் ராணியை மேட்டு சூளகரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் புரட்சிமதி(22) கடத்திச் சென்றுவிட்டார். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் உடந்தையாக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராணி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள புரட்சிமதியை வலை வீசித் தேடி வருகின்றனர்.