நாடாளுமன்றத் தேர்தலுக்குள் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதம்: ஹசாரே எச்சரிக்கை
டெல்லி: 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இனி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதம் இருந்தபோது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் நான் இனி உண்ணாவிரதம் இருக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை மீறவும் தயாராக இருக்கிறேன். இம்முறை நான் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆமாம், எங்கள் குழுவில் பிளவு ஏற்பட்டுவிட்டது. ஆனால் இரு பாதைகளும் தேவை தான் என்று நான் நம்புகிறேன். அரசியல் எங்கள் வழியன்று என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்காக நாங்கள் எதிரிகள் அல்ல. யார் வேண்டுமானாலும் தனக்கு பிடித்த பாதையைத் தேர்வு செய்யலாம். பல்வேறு ஊழல்களில் சிக்கி அரசியல் தலைமை தவிக்கையில் எப்படி திறமையாக ஆள முடியும் என்றார்.
ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் பெயரை இனி பயன்படுத்த மாட்டேன் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால் அந்த பெயரை தாங்கள் பயன்படுத்துவோம் என்று அன்னா குழுவினர் தெரிவித்துள்ளனர்.