எதிர்காலமாவது நமக்கு ஒளிமயமாக அமையட்டும் - விஜயகாந்த்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில்,
தீபாவளி திருநாள் என்றாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடக் கூடிய ஒரு திருநாளாகும். ஆண்டிற்கு ஒருமுறை வந்து செல்லும் விழாக்களில் பொங்கலுக்கு அடுத்தபடியாக தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தீமைகளை அகற்றி நன்மைகளை தருவது இந்த விழா கொண்டாடுவதின் நோக்கமாகும். இருட்டை விளக்கி, விளக்கை ஏற்றி வைத்து இதன் அடையாளமாகவே கொண்டாடுகின்றனர். ஆனால் தற்போதைய மின்வெட்டின் காரணமாக தமிழ்நாட்டு மக்களுக்கு இருண்ட தீபாவளியே இன்று நடைமுறையில் கொண்டாட வேண்டிய அவல நிலையில் உள்ளது. இதற்கு விடிவு காலம் எப்பொழுது பிறக்குமோ என்பது தெரியாது.
இந்த சூழ்நிலையில் தீபாவளி கொண்டாட வேண்டி இருந்தாலும் வழக்கம் போல மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடக் கூடிய ஒரே தருணம் இதுதான்.
இருப்பதைக் கொண்டு சிறப்பாக தீபாவளி கொண்டாடி குடும்பத்தோடும், உறவினர்களோடும், நண்பர்களோடும் சந்தோஷமாக கொண்டாட எனது இதயமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். எதிர்காலமாவது நமக்கு ஒளிமயமாக அமையட்டும் என்றும் இந்த நேரத்தில் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தர்மம் வெல்லும் : ராம.கோபாலன்
இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
அதர்மம் அழிந்து தர்மம் வென்று தீரும் என்பது தெய்வ அவதாரங்கள் தரும் செய்தியாகும். என்ன வரம் பெற்றிருந்தாலும் அதர்ம வழியில் செல்பவன் அழிந்தே தீருவான் என்பதையும், தர்மம் என்றும் வென்று தீரும் என்ற நம்பிக்கையையும் தீபாவளித் திருநாள் தருகிறது.
எல்லோரும் நலமாக, வளமாக வாழவும், நமது பாரத தேசம் உலகின் தலைசிறந்த நாடாகத் திகழவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துத் தீபாவளித் திருநாளில் வாழ்த்துகிறேன்.
சமீபத்தில் பரமக்குடியிலும், தர்மபுரியிலும் இந்து சமூகத்தின் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் பழைய விரோதத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது.
மத நல்லிணக்கம் பற்றி எல்லா அரசியல் கட்சிகளும் பேசுகின்றன; வலியுறுத்துகின்றன. அவை ஏன் சாதீய நல்லிணக்கத்திற்குப் பாடுபடுவதில்லை? முன் வந்து அமைதியை ஏற்படுத்த முனைவதில்லை?
பல சாதீய கலவரங்களுக்கு அரசியல் கட்சிகள்தான் காரணமாகவோ, ஆதரவாகவோ செயல்படுவதாகவும், அதற்கு சாதி ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்கு என்று மக்கள் கருதுகிறார்கள். இந்தப் போக்கை அரசியல் கட்சிகள் கைவிட்டு, இந்து சமுதாய ஒற்றுமைக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
இந்து சமூகத்தின் அனைத்து மக்களிடமும் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள், சமூக நல்லிணக்கம் நிலைக்க அந்த நல்லவர்கள் வல்லவர்களாகி முன் வந்து அமைதிக்கு வழிகாண வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்து சமுதாய ஒற்றுமைக்கு அனைத்து இந்து இயக்கங்கள், அமைப்புகள் முனைப்பு காட்ட வேண்டும்.
வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய தமிழகத்துத் துறவியர் பெருமக்கள் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று சமூக நல்லிணக்கம் ஏற்பட முயற்சி எடுத்துள்ளார்கள்.
சமூக ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் கோயில் தேரோட்டங்கள் சிறந்த வழிகாட்டின. எனவே அரசு எல்லா ஆலயத் திருத்தேர்களையும் சீர்செய்து, தேரோட்டம் நடைபெறவும், அதன் மூலம் சாதி வேறுபாடுகளால் ஏற்படும் சச்சரவுகள் மறைந்து சமூக நல்லிணக்கம் ஏற்படவும் ஆவன செய்ய இந்து முன்னணி வலியுறுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.