ஸ்பெக்ட்ரம் ஏலம்.. அரசு எதிர்பார்த்தது ரூ. 40,000 கோடி.. ஆனால், வந்தது ரூ. 9,240 கோடியே!
மத்தியில் ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது நாட்டின் 22 மண்டலங்களில் 9 செல்போன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை ஏலம் மூலம் விற்க உத்தரவிட்டது.
இதையடுத்து இதை ஏலம் விடும் பணி சில நாட்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், 6 சுற்று ஏலம் முடிந்த நிலையில் வெறும் ரூ. 9,240 கோடிக்கே இந்த ஸ்பெக்ட்ரம் விலை கோரப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பை, கர்நாடகம், ராஜஸ்தானுக்கான ஸ்பெக்ட்ரத்தை வாங்க யாருமே முன்வரவில்லை.
நாடு முழுவதுக்குமான 5 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்துக்கான அடிப்படை விலையை மத்திய அரசு ரூ. 14,000 கோடியாக நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், பெரிய நகர்களில் புதிதாக செல்போன் வாங்குவோரின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வரும் நிலையில், இவ்வளவு விலை கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தயாராக இல்லை. மேலும் பல முன்னணி நிறுவனங்களிடம் இப்போதைக்கு தேவையை விட அதிகமான ஸ்பெக்ட்ரம் உள்ளது. இதனால் அவர்கள் இதை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
நாட்டில் மொத்தமுள்ள செல்போன் நிறுவனங்களில் பாதி கூட இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார், வீடியோகான், டெலிவிங்ஸ் ஆகியவை மட்டுமே ஏலத்தில் பங்கேற்றன. ஆனால், இதில் யாருமே 22 மண்டலங்களுக்கான லைசென்ஸையும் கோரவில்லை.
செல்போன் பயன்பாடு குறைவாக உள்ள பிகார், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றில் ஸ்பெக்ட்ரம் பெறவே இவை போட்டி போட்டன. எதிர்காலத்தில் இங்கு செல்போன்கள் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வைத்து இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 800 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்க ஒருவர் கூட முன் வராததால் அந்த ஏலமே ரத்து செய்யப்பட்டுவிட்டது. மொத்தத்தில் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ. 40,000 கோடி ஈட்டி பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறையை ஓரளவுக்கு நீக்கிவிடலாம் என மத்திய அரசு நினைத்திருந்த நிலையில், இதுவரை வெறும் ரூ. 9,240 கோடியளவுக்கே ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றும் ஏலம் தொடர்கிறது.