ஒரு தம்பதி.. 2 லட்சம் பேர்.. ரூ. 493 கோடி 'ஸ்வாஹா'.. 94 வங்கி கணக்குகள், 13 போலி பெயர்கள்!!
முதலீடுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதாகக் கூறி ஸ்டாக் குரு நிறுவனம் டெல்லி, உத்தர்கண்ட், ஹிமாச்சல் பிரதேஷ், சிக்கிம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சுமார் 2 லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் முதலீடுகளுக்கு வட்டியும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து இந்த நிறுவனம் மீது 14,303 புகார்கள் குவியவே, அதன் அதிபரான உல்லாஸ் பிரபாகர் கைரே (33), அவரது மனைவி ரக்ஷா உர்ஸ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். கிட்டத்தட்ட ஓராண்டு தேடலுக்குப் பின் அவர்கள் சமீபத்தில் மகாராஷ்டிராவில் வைத்து சிக்கினர். இவர்களை டெல்லி போலீசின் பொருளாதாரக் குற்றப் பிரிவினர் கைது செய்தனர்.
இந்த நிறுவனத்தில் 2,05,062 முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வரை முதலீடு செய்துள்ளனர். மொத்தம் ரூ. 493 கோடி வரை ஸ்டாக் குரு நிறுவனம் வசூலித்துள்ளது.
இவர்களை போலீசார் தேட ஆரம்பித்ததும் மெராதாபாத், டெஹ்ராடூன், அல்வார், நாக்பூர், கோவா, ரத்னகிரி என இடம் மாறி பல்வேறு போலி பெயர்களில் தங்களது 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
2010ம் ஆண்டில் இவர்கள் ஸ்டாக் குரு நிறுவனத்தை தொடங்கியதே கூட இவர்களது போலி பெயர்களில் தான் என்பதும் தெரியவந்துள்ளது. முதலீடுகளுக்கு ஒரே மாதத்தில் 20 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி லட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ளனர்.
நாடு முழுவதும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளனர். ஏராளமான ஏஜெண்டுகளை நியமித்து பணத்தை வசூல் செய்துள்ளனர்.
ரூ. 493 கோடி தேறியதும் ஒரு நாள் திடீரென நிறுவனத்தையே மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு 20 வங்கிகளில் 94 கணக்குகள் உள்ளன. இவை 13 பெயர்களில் உள்ளன. நாடு முழுவதும் 12 இடங்களில் வீடுகளும் 12 உயர் ரக கார்களும் உள்ளன.
இந்த சொத்துக்களை முடக்கும் வேலைகளை துவங்கியுள்ளன.
இவர்கள் வெளிநாடுகளிலும் முதலீடு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அமலாக்கப் பிரிவும் விசாரணையில் இறங்கியுள்ளது. கூடவே Serious Fraud Investigation Office அமைப்பும் விசாரணையை ஆரம்பித்துள்ளது.