சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கோரப் போகும் இடதுசாரிகள்
டெல்லி: வரும் 22ம் தேதி துவங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வர இடதுசாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன.
வரும் 22ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வர இடதுசாரிகள் நேற்று நோட்டீஸ் ஒன்றை சமர்பித்துள்ளன. இதற்கு இரு அவைகளின் தலைவர்களும் சம்மதித்தால் வாக்கெடுப்புக்கு பிறகு அன்னிய நேரடி முதலீடு குறித்து விவாதம் நடத்தப்படும்.
குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஐக்கிய. முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்களை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும் எதிர்த்தாலும் அரசுக்கான அவர்களின் ஆதரவு குறித்து மௌனமாக உள்ளனர்.
இந்நிலையில் மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் விருந்தளித்தார். அப்போது குளிர்கால கூட்டத் தொடரில் அரசுக்கு ஆதரவாக இருக்குமாறு அவர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2 மாதங்களில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த 21 திட்டங்களுக்கு மமதாவும், இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இத்திட்டங்கள் குறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது சாதாரண விஷயம் அன்று.