கட்காரி குறித்து டிவிட்டரில் எழுதி, சிறிது நேரத்தில் நீக்கிய குருமூர்த்தி!
பூர்த்தி குழுமத்தில் நிதின் கட்காரியின் முதலீடுகள் தொடர்பாக ஊழலுக்கு எதிரான கெஜ்ரிவாலின் இயக்கம் பிரச்சனை கிளப்பியதையடுத்து கட்காரி பதவி விலக வேண்டும் என்று மூத்த பாஜக தலைவரான ராம் ஜேத்மலானி கோரியுள்ளார். இவருக்கு கட்சியின் பிற மூத்த தலைவர்களும் ஆதரவாக உள்ளனர்.
இந் நிலையில் கட்காரியை காக்கும் முயற்சிகளை ஆர்எஸ்எஸ் தொடங்கியது. கட்காரி எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆடிட்டரான குருமூர்த்தி தந்த அறிக்கையின் அடிப்படையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பாஜக அறிவித்தது.
இதற்கிடையே நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதிய குருமூர்த்தி, நான் கட்காரி குற்றமற்றவர் என்று கூறவில்லை. எனக்கு முழுமையாகத் தெரியாத யாருக்கும் என்னால் 'clean chit' தர இயலாது. எனக்கு கட்காரியையே தெரியாது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குருமூர்த்தியின் கருத்து ஆதரவாகவும் எதிராகவும் ஏராளமான டிவிட்டர் பதில்கள் பதிவாயின.
இந் நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் கட்காரி குறித்த தனது டிவிட்டர் தகவலை குருமூர்த்தி நீக்கிவிட்டார்.
அதற்குப் பதிலாக அவர் வெளியிட்ட இன்னொரு டிவிட்டர் செய்தியில், ''எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டன. கட்காரிக்கு எதிரான ஊடக செய்திகள் தவறானவை என்று தான் நான் கூறியிருந்தேன். இது நான் கட்காரிக்கு ஆதரவாக தந்த 'clean chit' என்றால், அதை நான் தந்ததை ஒப்புக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்ததாக அவர் வெளிட்ட டிவீட்டில், பூர்த்தி விவகாரத்தி் நான் கட்காரிக்கு 'clean chit' தந்ததுள்ளேன் என்றும் அதைத் தொடர்ந்து வெளியிட்ட இன்னொரு தகவலில், தவறாக புரிந்து கொள்ளப்பட்ட டிவீட்களை மட்டுமே நான் நீக்கினேன் என்றும் கூறியுள்ளார்.
குருமூர்த்தி அடுத்தடுத்து இவ்வாறு டிவீட் செய்து கொண்டிருந்தது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. பின்னணியில் என்ன நடந்து கொண்டிருந்ததோ?.
கட்சித் தலைவர் வர்த்தகப் புள்ளியாக இருக்கக் கூடாது-குருமூர்த்தி:
இந் நிலையில் கட்சியின் தலைவர்கள் வர்த்தகப் புள்ளிகளாக இருப்பது முறையல்ல என்று கூறியுள்ளார் குருமூர்த்தி. தனது டிவிட்டர் பக்கத்தில், எந்தக் கட்சியின் தலைவரும் வர்த்தகப் புள்ளிகளாக இருப்பது தவறு. கட்காரி இன்னும் கட்சியின் தலைவராக இருப்பாரா இல்லையா என்பதைப் பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார்.