பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தீபாவளி சிறப்பு விருந்து கொடுத்த சர்தாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி தீபாவளி அன்று இரவு சிறப்பு விருந்து கொடுத்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் சென்ற அவர் அங்கு ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நிதிஷ் குமார் மற்றும் அவருடன் சென்றுள்ள அதிகாரிகள் நேற்று மாலை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்திப்பதாக இருந்தது. அந்த சந்திப்புக்கு பிறகு அவர்களுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விருந்து கொடுப்பதாக இருந்தது.
ஆனால் நேற்று தீபாவளி என்பதை அறிந்த சர்தாரி நிதிஷ் குமார் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு நேற்று இரவு சிறப்பு விருந்து கொடுத்தார். மேலும் தீபத் திருநாளன்று சர்தாரி இந்துக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து சர்தாரி கூறுகையில்,
மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்கிறோம். பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் அனைவரும் சமமே. மதம் மற்றும் நம்பிக்கை என்ற பெயரில் சிறுபான்மையினரை யாரும் காயப்படுத்த விடமாட்டோம் என்பதை நான் மறுபடியும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்றார்.
நிதிஷ் குமார் பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கொஹன்ஜதரோ, பழமை வாய்ந்த இந்து கோயில் ஆகியவற்றுக்கு சென்றார். மேலும் அவர் சிந்த் மாகாணத்தில் நடந்த இந்து பஞ்சாயத்தில் உரையாற்றினார்.