சிவகங்கையில் அதிமுக பிரமுகர், மகன், டிரைவர் வெட்டிக் கொலை
சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவர் அணிச் செயலாளராக இருந்தவர் கதிரேசன் (42). இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பகைஅஞ்சான் கிராமத்துக்கு காரில் தனது மகன் பிரசன்னா (14), மகள் நிகிலாவுடன் (11) சென்றார். காரை அவரது டிரைவர் பூமிநாதன் (30) ஓட்டிச் சென்றார்.
ஊரியிலிருந்து நேற்றிரவு இவர்கள் சிவகங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இளையான்குடி சாலையில் கார் சென்றது. சிவகங்கை அருகே உள்ள நெடுங்குளம் என்ற இடத்தை கார் இரவு 10 மணிக்கு நெருங்கியபோது ஒரு கும்பல் ஆயுதங்களுடன் காரை வழிமறித்தது.
காரை டிரைவர் பூமிநாதன் நிறுத்தியவுடன் அந்தக் கும்பல் காரின் கதவை திறந்து கத்தி, வாள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் காரில் இருந்தவர்களை கொலை வெறியுடன் தாக்கியது. கதிரேசனை சரமாரியாக வெட்டியது. அதைத் தடுக்க முயன்ற டிரைவர் பூமிநாதன், மற்றும் கதிரேசனின் மகன் பிரசன்னா, மகள் நிகிலாவையும் அந்தக் கும்பல் கண்மூடித்தனமாக வெட்டியது.
இதில் கதிரேசன், அவரது மகன் பிரசன்னா, டிரைவர் பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சிறுமி நிகிலா படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த நிலையில் அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.
அருகில் இருந்தவர்கள் நிகிலாவை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த சிவகங்கை எஸ்பி பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். தப்பி ஓடிய கும்பலை பிடிக்க மாவட்டம் முழுவதும் இரவிலேயே போலீஸ் சோதனை தொடங்கியது.
பதற்றம்- கடையடைப்பு, பஸ்கள் ஓடவில்லை:
இந்தப் பிரச்சனையால் சிவகங்கையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலின்போது கதிரேசனுக்கும் வேறு சிலருக்கும் பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் கொலைகள் நடந்ததாகத் தெரிகிறது.