அன்னிய முதலீடு விவகாரம்: சஸ்பென்ஸ் இருந்தால் தான் 'படம்' நன்றாக ஓடும்-கருணாநிதி
அவர் அளித்த பேட்டி,
கேள்வி: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு பிரச்சனையை முன்வைத்து இடதுசாரி கட்சிகளும், வேறு சில கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்களே, அந்த கோரிக்கையை திமுக ஆதரிக்குமா?
கருணாநிதி: அன்னிய நேரடி முதலீடுகளை பற்றி திமுக தனது நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களையெல்லாம் அழைத்து கலந்து பேசி, கழகத்தின் சார்பில் எங்கள் கருத்துக்களைத் தெரிவிப்போம்.
கேள்வி: இதிலே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், திமுக அதை ஆதரிக்குமா?. இதில் சஸ்பென்ஸ் வைத்து பேசுகிறீர்களே?
கருணாநிதி: நான் நூறு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியிருக்கிறேன். அந்த படங்களில் சஸ்பென்ஸ் இருந்தால் தான், அந்த படம் நன்றாக ஓடும்.
கேள்வி: அன்னிய நேரடி முதலீடு சிறு வியாபாரிகளைப் பெரிதும் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். இந்த பிரச்சனையில் நீங்கள் தெளிவான முடிவை சொல்ல வேண்டும். அதிலே ஏன் சஸ்பென்ஸ்?
கருணாநிதி: தமிழ்நாட்டிலே உள்ள சில்லறை வியாபாரிகளும், நடுத்தர வியாபாரிகளும் அன்னிய நேரடி முதலீடு தங்களைப் பெரிதும் பாதிக்கும் என்று சொல்லுகிறார்கள். அவர்களின் நலன்களை முன் வைத்துத்தான் இதைப்பற்றி நாங்கள் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.
முன்னதாக திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்டோபர் 1ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் யார் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை திமுக ஆதரிக்கும் என்றார்.
இந் நிலையில் கருணாநிதியை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று கோரிக்கை வைத்துவிட்டுச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.