ரவுடிகளிடம் தொடர்பு... போலீஸாருக்கு டி.எஸ்.பி வெள்ளைத்துரை கடும் எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் ரவுடிக்கும்பலின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பாச்சேத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் ரவுடிக் கும்பலால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் மானாமதுரை டி.எஸ்.பியாக வெள்ளத்துரை பொறுப்பேற்றுக்கொண்டார் இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், குற்றவாளிகளிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
மானாமதுரை துணைக் கோட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினர் பெரும்பாலோர் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களில் பலர் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பதும் டி.எஸ்.பிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இரு நாள்களுக்கு முன்னர் அனைத்து அரசியல் கட்சியினரை அழைத்து டி.எஸ்.பி வெள்ளைத்துரை ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், ரவுடிக்கும்பலால் போலீஸ் எஸ்.ஐ கொலை செய்யப்படும் அளவுக்கு இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இனிமேல் சட்டத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குற்றவாளிகள், ரவுடிகள், சமூகவிரோதிகளிடம் தொடர்பு வைத்திருக்கும் காவல் துறையினர் விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
டிரான்ஸ்பரால் கலக்கம்
மானாமதுரை துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலைங்களில் இடமாறுதல் செய்யப்பட வேண்டிய சிறப்பு எஸ்.ஐ, தலைமைக்காவலர் மற்றும் காவலர்கள் பட்டியலை டி.எஸ்.பி வெள்ளத்துரை தயாரித்து வருவதாகவும், இவர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கொடுக்காமல், பிற மாவட்டங்களுக்கு மாறுதல் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள போலீஸார் கலக்கமடைந்துள்ளனர்.