மின் வெட்டு கூட சில சமயம் நல்லதுதான்...!
அருள்மிகு கரண்டு சாமி
சென்னை நீங்கலாக இப்பொழுதெல்லாம் கரண்டை கடவுளுக்குச் சமமாகத்தான் கருதுகின்றனர். தீபாவளி தினம் தவிர பிற நாட்களில் கிராமங்களில் 4 அல்லது 5 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் கைதான் கேதான் ஃபேன். பனை விசிறியும், நியூஸ் பேப்பரும்தான் உதவி புரிந்தது. இந்த மின்வெட்டுப் பிரச்சினையினால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அம்மியும், ஆட்டுக்கல்லும்...
மின்வெட்டினால் வீட்டு சமையலில் மீண்டும் பழைய முறை எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது. விலையில்லா மிக்ஸியும், கிரைண்டரும் பரண்மேல் தூங்கிக் கொண்டிருக்க அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்து வைத்த சமையல்தான் கிராமங்களில் மணக்கிறது. இதனால் சத்தோடு, கிராமத்து பெண்கள் மீண்டும் ஆரோக்கியத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஏங்க, திண்ணைக்கு வாங்க பேசலாம்
முன்பெல்லாம் வீட்டுத் திண்ணைகள் அமர்ந்து பெரியவர்கள் கதை சொல்ல சிறுசுகள் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். டிவி வந்தபிறகு சின்னக்குழந்தைகள் கார்டூன் சேனலுக்கும், பெரியவர்கள் சீரியல் பார்க்கவும் சென்றுவிடவே திண்ணைகள் காலியாக கிடந்தன. இப்போது மின்வெட்டினால் காற்றாட திண்ணையில் அமர்ந்து கதை பேசுவதை மீண்டும் பார்க்க, அனுபவிக்க முடிகிறது.
தண்டட்டி பாட்டியின் சீரியலுக்கு தடா
கடந்த பத்து ஆண்டுகளாக சீரியலே கதியாக கிடந்த தாய்மார்கள், பாட்டிமார்கள் எல்லோரும் மின்வெட்டுப் பிரச்சினையினால் டிவிக்கு லீவ் விட்டுவிட்டு நூலகங்களை நாடிச் செல்லத் தொடங்கிவிட்டனர். எல்லோர் வீட்டிலும் ஏதாவது நல்ல புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருக்கின்றனர். படிக்காத பாட்டிகள் அந்த புத்தகங்களில் உள்ள கதைகளை படிக்கச் சொல்லி கேட்கின்றனர்.
கபடியும், கிளித்தட்டும்...
90களில் சன் டிவி, ராஜ்டிவி உள்ளிட்ட சேட்டிலைட் சேனல்கள் வரும் வரை டிவி பார்க்க சிறுவர்கள் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மாலை நேரத்தில் ஆண் குழந்தைகள் கபடியும், பெண் குழந்தைகள் கிளித்தட்டு, பாண்டி, பல்லாங்குழி என ஆடி பொழுதை போக்குவார்கள். ஆனால் டிவிகளின் வருகை இவற்றை மண்ணோடு மண்ணாக்கிவிட்டது. ஆனால் மின்வெட்டுப் பிரச்சினையினால் கிராமங்களில் மீண்டும் இந்த விளையாட்டுக்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. பள்ளி முடிந்து வந்த உடன் குழந்தைகள் மீண்டும் ஓடி ஆடி விளையாடுவதால் அவர்கள் ஆரோக்கியத்திற்குத் திரும்பி வருகின்றனர் என்பதே உண்மை.
இதை பார்க்கும் போது நல்லது நடக்குதுன்னா.... நாலு நாளுக்கு மின் வெட்டு இருந்தா கூட நல்லதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது.