2ஜி ஸ்பெக்ட்ரம்: ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது சரியா வினோத் ராய்?
2008ம் ஆண்டு ஆ.ராசா மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதனால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி ஏற்பட்டதாக சிஏஜியாக உள்ள வினோத் ராய் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல்வேறு விவகாரங்களிலும் மத்திய அரசுக்கு எதிரான புயலைக் கிளப்பி வந்தார்.
இதையடுத்து ராசா ராஜினாமா செய்தார், 122 2ஜி லைசென்சுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதை ஏல முறையில் விற்க உத்தரவிட்டது.
இதன்படி, கடந்த 12ம் தேதி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களைள் ஏலம் விடும் பணி தொடங்கியது. இதன்மூலம் ரூ. 30,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், வெறும் ரூ.9,407 கோடிக்கு மட்டுமே அது விலை போனது.
இந்நிலையில், ஏல முறையில் ஒதுக்கீடு செய்திருந்தால் நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கிடைத்திருக்கும் என்று கூறிய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்க்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனீஷ் திவாரி சரமாரியாக கேள்விகள் கேட்டுள்ளார்.
அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தணிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்திருந்தது. அந்த ரூ.1.76 லட்சம் கோடி எங்கே? தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, ரூ.1.76 லட்சம் கோடிக்கு பக்கத்தில் கூட செல்லவில்லையே? எனவே, தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. அதேபோல, இதை வைத்து 2 ஆண்டுகளாக அரசியல் நடத்திய பாஜகவும் பிற எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இழப்பு எந்த அளவுக்கு சரியானது என்பதை வினோத் ராய் மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும். அதே சமயத்தில், மத்திய அரசு மீது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிருப்தியில் இருப்பதால்தான், இவ்வளவு குறைந்த தொகைக்கு ஏலம் போனதாக கூறப்படுவது சரியல்ல என்றார்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நிலோத்பல் பாசு கூறுகையில், மத்திய அரசின் வாதம், சாத்தானின் வாதம் போல உள்ளது. ஆ.ராசா, 122 லைசென்ஸ்களை வெறும் ரூ.9,200 கோடிக்குத்தான் விற்றார். ஆனால், தற்போது 22 லைசென்சுகள் மட்டுமே விற்ற போதிலும், பழைய தொகையை விட அதிகமாகவே (ரூ.9,407 கோடி) கிடைத்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
ராசா மீது குற்றம் சாட்ட வினோத் ராய் கையாண்ட கணக்கு முறையே தவறானதாகக் கருதப்படுகிறது. 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்ட விலையை வைத்து 2ஜி விலையை வினோத் ராய் அண்ட் கோ மனம்போன போக்கில் நிர்ணயித்தது.
3ஜி என்பது மிக மிக குறைவாக உள்ள அலைவரிசை ஆகும். இதனால் அதற்கு மிக அதிகமான விலை வைத்தாலும் கூட வாங்க போட்டி இருந்தது. ஆனால், 2ஜி கதை அதுவல்ல. மிகையாகவே உள்ள இந்த ஸ்பெக்ட்ரத்தை யாரும் மாபெரும் விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை.
ஆனால், 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்ட விலையை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு ராசா நிர்ணயித்த விலை மிக மிகக் குறைவு என்று சிஏஜி பிரச்சனை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் வந்துவிட்டதாக யாரும் சொல்ல முடியாது என்பதே உண்மை என்பதை இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் கிடைத்துள்ள தொகை தெளிவாகவே காட்டிவிட்டது.