பாகிஸ்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் லஷ்கர் இ தொய்பா!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா, அந்நாட்டின் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதல் உட்பட இந்தியாவின் பல்வேறு தாக்குதல்களில் லஷ்கர் இ தொய்பாவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பாவானது ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் மூலமாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பதாக வெளிநாடுகளின் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஜமாத் உத் தவா அமைப்பு முதலீடு செய்து வரும் பணம் அனைத்துமே லஷ்கர் அமைப்புக்கு சொந்தமானது என மத்திய அரசிடம் அந்த உளவு அமைப்புகள் கூறியுள்ளன.
பணப் பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட தொகையை பெற்ற சில சந்தேக நபர்களைப் பிடித்த போதே இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 35 பேரிடம் பங்கு சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.