அசைவம் சாப்பிடுபவர்கள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுவார்கள்: சிபிஎஸ்சி தரும் அடுத்த அதிர்ச்சி
9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது அசைவம் உண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவப் பருவத்தில் இதுபோன்று கூறப்படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை நீக்கவேண்டும் என்று அசைவ உணவுப் பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே நாடார்கள் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே அடங்காத நிலையில் அசைவ உணவு பற்றி புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. ஆனால் இது குறித்து கருத்து கூறியுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ இது எதிர்பாராத நிகழ்வு என்று கூறியுள்ளார். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கூறும் போதோ, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றி கூறும் போதோ கவனமாக குறிப்பிட வேண்டும் என்று கூறினார். 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.