கோபி அருகே வயலில் திரிந்த ஈமு கோழிகள்… பிடித்து சமைத்த மக்கள்!
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பறவையான ஈமு 2006ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்திற்கு அறிமுகம் ஆனது. சுசி ஈமு நிறுவனத்தைச் சேர்ந்த குரு, ஈமு வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தார். இதனை நம்பி ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர். பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட பண்ணை உரிமையாளர்கள் திடீரென்று முதலீட்டாளர்களுக்கு பட்டை நாமத்தை சாத்திவிட்டு கம்பி நீட்டிவிட்டனர்.
பாதிக்கப் பட்டவர்கள் பொருளாதார குற்றப் பிரிவு போலீசில், புகார் செய்தனர். மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, நஷ்ட ஈடு வழங்கும் வகையில், ஈமு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நிலங்கள் மற்றும், "ஈமு' கோழிகளை அரசு பறிமுதல் செய்தது
இதனிடையே லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து வாங்கிய ஈமு கோழிகளுக்கு தீவனம் அளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஈமு கோழிகள் செத்து மடிந்து வரும் நிலையில் சில விவசாயிகள் யாருக்கும் தெரியாமல் கோழிகளை காடுகளிலும், சாலைகளிலும் விட்டுச் செல்லும் அவலம் நடைபெறுகிறது.
சனிக்கிழமையன்று கோபிச் செட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டன்புதூர் தோண்டராயன்கரடு கிராமங்களில் 70க்கும் மேற்பட்ட கோழிகளை இரவோடு இரவாக விட்டுச் சென்றுள்ளனர். வயல்வெளிகளிலும், சாலைகளிலும் ஈமு கோழிகள் சுற்றித் திரிவதை கண்ட கிராம மக்கள் துரத்தி பிடிக்க துவங்கினர். ஒவ்வொருவரும், தங்கள் கைக்கு கிடைத்த ஒன்று, இரண்டு கோழிகளை பிடித்து தங்கள் வீட்டு கொண்டு சென்றனர்.
ஈமு கோழிகள் ஆங்காங்கே திரிவது குறித்து தகவல் பரவியதால், பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வயல்வெளியில் தேடினர். பிடித்த, "ஈமு' கோழிகளை, சிலர் உடனடியாக சமைத்தனர். இதனால் கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. ஈமு கோழிகளை இந்தப் பகுதிகளில் விட்டுச் சென்றவர் யார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.