மக்களவை வேட்பாளர்கள்- ரகசிய ‘ஒற்றர் படை’ அமைத்த ராகுல்- சட்டனெ லீக்கான பரிதாபம்!
டெல்லி: மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி அதன் பொதுச்செயலாளரான ராகுல் காந்தி தலைமையில் சந்திக்கும் என்று அறிவித்த உடனேயே நாடு முழுவதும் 50 பேர் கொண்ட ஒரு ஒற்றர் படையை அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறாராம். இந்த ஒற்றர் படை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் திட்டமிட்டிருக்கிறாராம் ராகுல். ஆனால் ராகுலின் ஒற்றர்படை பற்றிய தகவல்கள் இப்போதே கசிந்துபோய்விட்டது என்பதுதான் பரிதாபம்!
ராகுல் அனுப்பும் ‘ஒற்றர் படை' அவரது சொந்த தொகுதியான அமேதிக்கும் போகிறது. அவரது அம்மாவின் தொகுதியான ரேபரேலிக்கும் போகிறது. ஒளிவு மறைவின்றி தற்போதைய எம்.பிக்களின் செயல்பாடுகள், தொகுதிகளில் செல்வாக்கு மிக்க மற்ற வேட்பாளர்கள் ஆகியோரைப் பற்றிய இந்த ஒற்றர் படை தகவல் சேகரிக்குமாம். வழக்கமாக மாநில தலைவர்கள் மற்றும் உளவு பிரிவினரிடம் இருந்தும் ராகுல் காந்தி தகவல் பெறுகிறாராம். அனைத்து தகவல்களின் அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்து ‘வெற்றி' பெறத் திட்டமிட்டிருக்கிறார் ராகுல் என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.
இந்த ஒற்றர் படையின் தலைவர் காங்கிரஸ் கட்சியின் 18 பொதுச்செயலர்களில் ஒருவரும் குஜராத் மாநில எம்.பியுமான மதுசூதன் மிஸ்ட்ரி. இவர் ஐந்து பேர் கொண்ட ஒரு தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருக்கிறார். ஒற்றர்படையை ராகுலும் மதுசூதனும்தான் இணைந்து தேர்வு செய்திருக்கின்றனர். இளம் எம்.பிக்கள், எம்.எல்.சிக்கள் இக்குழுவில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்த ஒற்றர் படையைப் பற்றி மாநில காங்கிரஸ் தலைவருக்கு மட்டுமே தெரியும். ஒற்றர் படையின் 50 பேருக்கும் தலா 10 முதல் 11 தொகுதிகளைக் கொடுத்திருக்கின்றனராம். அத்தனை தொகுதிகளையும் அலசி ஆராய்ந்து தெள்ளத் தெளிவான ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உத்தரவு. சரி எப்படி தகவல்களை சேகரிப்பது? என்ற கேள்விக்கு ஒற்றர் படை உறுப்பினர் 30 கேள்விகளைக் கொடுத்து தொகுதியில் அலசி ஆராய்வாராம். எப்படியெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்? தகவல் திரட்ட வேண்டும் என்று டெல்லியில் ராகுல் காந்தியே வகுப்பெடுத்திருக்கிறாராம்.
இப்படி ‘ரகசியமாக' ராகுல் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகும் நிலையிலேயே, நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியைப் பற்றி அலசி ஆராய.. அதாவது கடந்த முறை அதிமுகவின் ராஜகண்ணப்பன் புகார் சொல்லி வருவது போல அழிச்சாட்டியக் கணக்கு காண்பித்துதான் இம்முறையும் சிதம்பரம் தேறுவாரா? அல்லது உண்மையிலேயே தேறமாட்டாரா? என ஆராயச் சொல்லிருப்பது ஆந்திராவ்வின் ருத்ரராஜூ பத்ம ராஜூவையாம்! இவர் வசம் தமிழகத்தின் சிவகங்கை (ப.சிதம்பரம் தொகுதி) உட்பட 10 தொகுதிகளும் ஆந்திராவின் பானு பிரசாத் வசம் ஒடிஷாவில் 11 தொகுதிகளும் ஒப்படைத்திருப்பதாக ‘லீக்' ஆகிவிட்டதே!
இது லீக் ஆனது ஆனதே! ராகுலின் நம்பிக்கையில் ‘லீக்' ஆகாமல் இருக்கட்டும்!