தலித்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் பேச்சு: தேவர் இன கூட்டமைப்பின் தலைவர் கைது
ராமநாதபுரம்: முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய தேவர் இன கூட்டமைப்பின் தலைவர் சண்முகய்யா பாண்டியன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதுபாண்டியர் நினைவு தினம், தேவர் குருபூஜையின் போது நடந்த கலவரங்கள், கொலைகளைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, பரமக்குடி, கடலாடி, கமுதி பகுதிகளில் இன்னும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந் நிலையில் முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் தேவர் இன கூட்டமைப்பின் தலைவர் சண்முகய்யா பாண்டியன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தனது சமூகத்தினர் மத்தியில் பேசிய அவர், இரு ஜாதியினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.
இதையடுத்து கமுதி துணை எஸ்பி அபிநவ் குமார், முதுகுளத்தூர் துணை எஸ்பி விக்கிரமன், கீழக்கரை டிஎஸ்பி சோமசுந்தர சேகர் ஆகியோர் அடங்கிய தனிப் படை போலீசார் சண்முகய்யா பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெருமாள், துரை சிங்கம், பாலமுருகன், சிவன்பாண்டி, சுப்பிரமணியன், சின்னத்துரை, கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் முதுகுளத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி மோகன்ராம் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் சண்முகய்யா பாண்டியன் உள்பட 6 பேர் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் மதுரை மத்திய சிறையிலும், சிவன்பாண்டி, கார்த்திக் ஆகியோர் மைனர் வயதினர் என்பதால் மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.