சீன அதிபர் வென் ஜியாபாவோவுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு
போம்பென்: கம்போடியாவில் நடைபெறும் ஏசியான் மாநாட்டின் போது சீன அதிபர் வென் ஜியாபாவோவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசியுள்ளார். தமது பதவிக் காலத்தில் மன்மோகன்சிங்குடனான கடைசி சந்திப்பாக இது இருக்கலாம் என்று வென் ஜியாபாவோ கூறியுள்ளார்.
கம்போடியாவில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பானஏசியானின் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருக்கிறார். இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள சீன அதிபர் வென் ஜியாபாவோவை மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜியாபாவோ, 8 ஆண்டுகளில் 14 முறை மன்மோகன் சிங்கை நட்புடன் சந்தித்திருக்கிறேன். இரு நாடுகளிடையே இணக்கமான சூழல், நட்புறவு திகழ்கிறது என்றார். மேலும் தமது பதவிக் காலத்தின் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம் என்றார்.
பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவிக்கையில், 2005,2010 ஆம் ஆண்டுகளில் வென் ஜியாபாவோவின் இந்திய பயணங்கள் இருநாட்டு உறவை வலுப்படுத்த உதவின என்றார். தனிப்பட்ட முறையில் வென் ஜியாபாவோவுடன் இணைந்து பணியாற்றுவதை பாக்கியமாகக் கூறியிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.