பால் தாக்கரேவை அரசு மரியாதையுடன் தகனம் செய்தது சரியா?
மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசியலில் தீர்மானிக்கக் கூடிய ஒரு சக்தியாக இருந்தாலும் அரசுப் பொறுப்பு எதிலுமே இல்லாத சிவசேனா தலைவர் பால் தாக்கரேக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது எப்படி சரியானதாக இருக்க முடியும்? என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.
பால் தாக்கரேவாகட்டும் அவரது தந்தையாகட்டும்.. அவர்கள் பேசியது அனைத்துமே ‘மகாராஷ்டிரா' மாநிலம் மராட்டியர்களுக்கே என்பது மட்டுமே! இது ஒரு தேசிய இனத்துக்கான சிந்தனையாக உருவெடுக்கவில்லை.. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் போல மராட்டியர்களை சிவசேனா கருதவில்லை... இந்துத்துவா என்ற ஒரு அதிதீவிர நம்பிக்கைக் கொள்கையை கையில் வைத்துக் கொண்டு வன்முறை, மத அரசியலை மேற்கொண்டவர் என்ற இமேஜ்தானே பால் தாக்கரே மீது இருக்கிறது? என்கிறது ஒருதரப்பு.
உலகம் முழுவதும் எந்த ஒரு இனமும் தனித்தே வாழ்ந்தது இல்லை.. ஒரு இனத்தின் மண்ணில்.. நிலப் பரப்பில் பிற இனத்தார் குடியேறுவது இயல்பே. அது ஆதிக்கமாக மாறாதவரை பிரச்சனை இல்லை என்பதுதான் யதார்த்த நியதி.
இப்படித்தான் மகாராஷ்டிராவில் தமிழர்களும், பீகாரிகளும், குஜராத்திகளும் குடியேறினர். தாக்கரே குடும்பம் கூட பீகாரிலிருந்து மகராஷ்டிராவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்தான்.. ஆனால் இப்படி புலம்பெயர்ந்தோரை மிரட்டி பணிய வைத்து மராத்தி பேசும் மக்களிடம் செல்வாக்கை வளர்த்தவர் என்பதை செல்வாக்கை வன்முறை மூலம் திணித்து பெற்றுக் கொண்டவர்தானே பால் தாக்கரே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!
இப்படிப்பட்ட மதம் சார்ந்த சிந்தனையாளராக .. இனத் துவேஷியாக விமர்சிக்கப்படுகிற பால் தாக்கரேவின் இறுதிப் பயணத்தில் 'அரசு மரியாதை' ஏன் தரப்பட்டது?. அவரது உடலில் தேசியக் கொடி ஏன் போர்த்தப்பட்டது.
இவருக்கு இந்த மரியாதை கொடுக்கப்பட வேண்டுமானால் சீக்கிய மததுக்காக போராடி உயிர் நீர்த்த பிந்தரன்வாலேவுக்கு ஏன் கொடுக்கக் கூடாது? என்ற் கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பிற மாநிலத்தவருக்கு எதிராக, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசிய பால் தாக்கரேவின் சடலத்தின் மீது இந்திய தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது என்பது வரலாற்றின் விசித்திரம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?