அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டது யார்?
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எர்வாட சிறையில் கடைசி சூர்ய உதயத்தை பார்த்துள்ளான் அஜ்மல் கசாப். கசாப்பிற்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே அவனை தூக்கில் போடுவது யார் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மத்திய சிறை, புனோயில் உள்ள எர்வாடா சிறையில் மட்டுமே தூக்குமேடை இருந்ததால் கசாப் யாரால் எங்கு தூக்கிலிடப்படுவார் என்று ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
கசாப்பை தூக்கிலிடும் வேலையை தனக்குக் கொடுத்தால் அதை தட்டாமல் செய்வேன் என்று மும்பை ஆர்த்தே சிறைச்சாலையில் ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற ஸ்வாதி சாத்தே கூறியிருந்தார். அதேபோல் 101 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி ஓய்வு பெற்ற அர்ஜூன் பிகா ஜாதவ் என்பவர் அஜ்மல் கசாப்பை தான் தூக்கில் போட தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் திடீரென இன்று காலை 7.30 மணியளவில் அஜ்மல்கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடைசி சூரிய உதயம்
தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடன் கைதியின் கழுத்துஅளவு, எடை, உயரம் அளவெடுக்கப்படும். அதற்கேற்ப தூக்கு கயிறு தயார் செய்யப்படும். தூக்கு தண்டனை காலை சூரிய உதயத்திற்கு பிறகுதான் நிறைவேற்றப்படும்.
தண்டனை நாளன்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கைதி எழுப்பப்படுவார். அவரிடம் உறுதிமொழி பெறப்படும். புத்தாடை வழங்கப்படும்.பின்னர் கைதியில் முகம் மூடப்படும் கைகள் பின்பக்கம் கட்டப்படும். ஒருபோதும் கைதி தூக்குமேடையை பார்க்க அனுமதி கிடையாது
இதன்பின்னர் பிற கைதிகள் இருக்கும் சிறை கதவுகள் மூடப்படும். பின்னர் தூக்குமேடை அருகே கைதி விரும்பினால் மதபோதகர் இருக்க அனுமதிக்கப்படுவார். தூக்கிலிடப்பட்டதும் மருத்துவர் பரிசோதித்து தண்டனையை உறுதி செய்வார். கைதியின் உறவினர் விரும்பினார் உடல் வழங்கப்படும். அஜ்மல் கசாப் பாகிஸ்தானியர் என்பதால் அவரது உடலை பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டதால் கசாப்பின் உடல் இங்கேயே புதைக்கப்பட்டது.
தூக்கிலிட்டது யார்?
மகராஷ்டிரா அரசு கசாப்பிற்காக இதுவரை 50 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.அம்மாநிலத்தில் தூக்கிலிப்படுபவர் யாரும் இல்லை என்பதால் தூக்கு தண்டனையை வேறுமாநிலத்தைச் சேர்ந்தவர்தான் நிறைவேற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் யார்? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படவில்லை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளுக்கு முன் தூக்கு
மகாராஷ்டிராவில் கடைசியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு அலிபாக் என்ற ஊரைச் சேர்ந்த சுதாகர் ஜோஷி தூக்கிலிடப்பட்டார். 1995ம் அவர் தூக்கிலிடப்பட்டார்.
அதேபோல் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஆர்.கே.வைத்யா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சுக்தேவ் சிங் சுகா மற்றும் ஹர்ஜீந்தர் சிங் ஜிண்டா ஆகியோர் 1992ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்.