நாளை சென்னை கொண்டு வரப்படும் பால் தாக்கரேவின் அஸ்தி: 26ல் ராமேஸ்வரத்தில் கரைப்பு
சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடந்த 17ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 18ம் தேதி மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது அஸ்தி நாட்டில் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்கள் மற்றும் நதிகளில் கரைக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது அஸ்தியின் ஒரு பங்கை ராமேஸ்வரத்தில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிவசேனா கட்சியின் தமிழக தலைவர் குமாரராஜா, துணை தலைவர் செல்வம், இந்து மக்கள் கட்சி நிறுவனர் ஸ்ரீதரன் ஆகியோர் அஸ்தியை வாங்கி வர மும்பை சென்றுள்ளனர். அவர்கள் பால் தாக்கரேவின் மகன் உத்தரவ் தாக்கரேவை சந்தித்து அஸ்தியைப் பெறுள்ளனர். நாளை விமானம் மூலம் அஸ்தி சென்னை கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து குமாரராஜா கூறுகையில்,
நாளை சென்னை வரும் பால் தாக்கரேவின் அஸ்தி அஞ்சலி செலுத்துவதற்காக பனகல் மாளிகையில் வைக்கப்படுகிறது. அதன் பிறகு தாம்பரம் சண்முகா ரோட்டில் உள்ள பாரதி திடலுக்கு கொண்டு செல்லப்படும். பிறகு செங்கல்பட்டு, திருப்பூர் வழியாக வரும் 23ம் தேதி கோவையைச் சென்றடையும். அதையடுத்து பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ராமேஸ்வரம் கடலில் கரைக்கப்படும் என்றார்.