'எய்ட்ஸ்' விழிப்புணர்வு எதிரொலி... இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது- ஐ.நா.
டிசம்பர் 1ம் தேதி சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுவதை ஒட்டி ஐ.நா நடத்திய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரிக்ஸ் நாடுகள் என்று அழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 122 சதவிகிதம் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைவான வருவாய், நடுத்தரமான வருவாய் கொண்ட நாடுகளின் எய்ட்ஸ் ஒழிப்பு நடவடிக்கைக்காக பொது செலவினங்களுக்கான நிதியில் பாதிக்கு மேல் செலவழித்துள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வுனால்தான் உலகில் உள்ள 25 நாடுகளில் எச்.ஐ.வி. கிருமித் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துள்ளது.
மியான்மர், பாபுவா, நியூ கினியா, தாய்லாந்து, நாடுகளில் எச்.ஐ.வி நோயால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.
2001-2011 ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவில் புதிய எச்.ஐ.வி. பாதிப்பு 57 சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த கட்டமாக எய்ட்ஸ் ஒழிப்புக்காக இந்திய அரசு, தனது பொது செலவின நிதியில் 90 சதவீதத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. இதேபோல் சீனா தனது பொது செலவின நிதியில் 80 சதவிகிதம் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக செலவிட திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஐ.நாவின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.